கூடங்குளம் வழக்கு விவகாரம்- கும்பர்கண நித்திரையில் ஜெ.,? மு.க. ஸ்டாலின் கேள்வி!

இது தொடர்பாக இன்று மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"மீனவர் நலன்" பற்றி ஜெயலலிதாவிற்கு அக்கறை இல்லை. வழக்கமான வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறார். வேறு எந்த புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்துவதில்லை. ஆனால் கருணாநிதி எப்போது ஆட்சிக்கு வந்தாலும், மீனவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்.
1974-ல் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகமும், 2007-ல் மீனவர்கள் நல வாரியமும் கருணாநிதியால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்பதை மீனவர் சமுதாய மக்கள் நன்கு உணருவார்கள். நல வாரியத்தின் மூலம் 4 கோடியே 52 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை மீனவர்களுக்கு வாரி வழங்கியவரும் கருணாநிதியே!
ஒரு மீனவர் அகால மரணம் அடைந்தால் அவர் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஒரு லட்சம் ரூபாய் நிதியை மனிதநேயத்துடன் மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்திக் கொடுத்து உண்மையிலேயே "மீனவ நண்பனாக"த் திகழ்ந்தவர் கருணாநிதி. ஜெயலலிதாவோ, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடிய மீனவர்கள் மீது எண்ணற்ற கிரிமினல் வழக்குகளைப் போட்டார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பு 6.5.2013 அன்று விசாரணைக்கு வந்தது. அன்று வழங்கிய தீர்ப்பில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக 15 கட்டளைகளை நீதிபதிகள் பிறப்பித்தார்கள். அதில் முக்கியமானது 14-வது கட்டளை ஆகும்.
அதில், Endeavour should be made to withdraw all the criminal cases filed against the agitators so that peace and normalcy be restored at Kudankulam and nearby places and steps should be taken to educate the people of the necessity of the plant which is in the largest interest of the nation particularly the State of Tamil Nadu." என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது கூடங்குளம் அணு மின் நிலையம் இருக்கும் இடத்திலும், அதன் சுற்று வட்டாரத்திலும் அமைதி மற்றும் சகஜ நிலைமை திரும்புவதற்காக போராட்டக்காரர்களுக்கு எதிராக போடப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளையும் வாபஸ் வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது தான் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் சாராம்சம்.
மீனவர்கள் படும் துயரத்தை உணர்ந்த உச்சநீதிமன்றமே அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஒன்பது மாதமாகியும் இதுவரை வாபஸ் வாங்காமல் இருக்கும் ஜெயலலிதா அரசின் போக்கு வேதனையானது , நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது,
கும்பகர்ண நித்திரையா?
அடிக்கடி கொடநாட்டிற்கு "ஓய்வு எடுக்கச் செல்லும்" ஜெயலலிதா மீனவர் நலனுக்காக கொடுக்கப்பட்ட இந்த தீர்ப்பை படித்துப் பார்த்தாரா? இல்லை அதற்கும் ஓய்வு கொடுத்து விட்டாரா? இல்லை இப்படி ஒரு தீர்ப்பு இருக்கிறது என்பதாவது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குத் தெரியுமா?
தன் மீதான பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பதற்கு, சட்டவிதிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து "எண்ணற்ற" மனுக்களைப் போட்டு தப்பித்துக் கொள்ள பகீரத முயற்சியில் ஈடுபடுகிற ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாமல் "கும்பகர்ன நித்திரை"யில் குளிர் காய்ந்து கொண்டிருப்பது ஏன்? இதுதான் மீனவர்களின் நலன் மீது இந்த அரசு காட்டும் அக்கறையா? ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி கூடங்குளம் மீனவர்களின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக ஜெயலலிதா அரசு வாபஸ் வாங்க வேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications