மதுரை அருகே இளம் பெண் கவுரவக் கொலை- பெற்றோர் உட்பட 8 பேர் கைது!
மதுரை: மதுரை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கவுரவ கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் பெற்றோர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உசிலம்பட்டியை சேர்ந்த திலீப்குமார் என்பவர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தன்னை காதல் திருமணம் செய்து கொண்டதால் மனைவி விமலாதேவியை அவரது பெற்றோர் கவுரவக் கொலை செய்து விட்டதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெண்ணின் பெற்றோர் வீரண்ணன், தேனம்மாள் ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்கள் தங்க பாண்டியம்மாள், முருகன் மற்றும் முனுசாமி, விருமாண்டி, பாண்டி, சுரேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், விமலாதேவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை உசிலம்பட்டி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்துள்ளனர்.