தேனி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த பெண் கைது
பெரியக்குளம்: தேனி மாவட்டம் பெரியக்குளம் அருகே பாலப்பட்டியில் கணவனை கொன்றுவிட்டு குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்காக போட்டுத் தள்ளிவிட்டு கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆண்களும், அவர்களுக்குச் சமமாக பெண்களும் கொலை செய்ய துணிந்து விட்டார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை பாரபட்சம் இல்லாமல் பலரும் இதில் செத்துப் போயுள்ளனர். ஆண்களை பெண்கள் போட்டுத் தள்ளுவதும் சமமான அளவில் அதிகரித்து வருவதுதான் பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது.
உயிரிழந்த ஆண்
பெரியகுளம் அருகே பாலப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், இவருடைய மனைவி மீனா. கடந்த 23ம் தேதி இரவு தமிழ் செல்வன் மரணமடைந்தார். குடிபோதையில் கீழே விழுந்த தமிழ் செல்வன் இறந்துவிட்டதாக அவரது மனைவி மீனா கூறவே, அதனை நம்பிய கிராம மக்கள் தமிழ்செல்வனின் உடலை அடக்கம் செய்தனர்.
போலீசில் புகார்
தமிழ்செல்வனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர்கள் மீனாவின் நடவடிக்கை பற்றியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையை தொடங்கிய போலீசார் மீனாவின் செல்போன் பேச்சு பதிவுகளை ஆய்வு செய்த போது உண்மை வெளிச்சத்து வந்தது. அதில் மீனாவும் அவரது காதலரும் பேசியது அதிர்ச்சிகரமாக இருந்தது.
கொலைக்கு திட்டம்
சுரேஷ் உடன் தவறான தொடர்பில் இருந்த மீனா, தங்களின் உறவுக்கு இடைஞ்சலாக இருந்த தமிழ்செல்வனை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி காரியத்தை கச்சிதமாக முடித்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.
இதனையடுத்து தமிழ்செல்வனின் உடலை தோண்டி எடுத்து காவல் துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த கொலை தொடர்பாக சுரேஷ் என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
முறையற்ற தொடர்பு
கள்ளக்காதல் கொலைகளில் பெரிய அளவில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு சரமாரியாக கொலை செய்கின்றனர். தமிழக தலைநகரமான சென்னையில் கடந்த 2014 முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் 250க்கும் மேற்பட்ட கள்ளக்காதல் கொலைகள் நிகழ்ந்துள்ளன.
கொலை செய்யும் மனைவி
கள்ளக்காதல் கொலைகளில் வெளியில் நடப்பதை விட வீட்டுக்குள் நடக்கும் கொலைகள்தான் அதிகமாக உள்ளது. கள்ளக்காதலிக்காக மனைவியைக் கொல்லும் கணவர்கள், கள்ளக்காதலர்களுக்காக கணவர்களைப் போட்டுத் தள்ளும் மனைவிகள், பெரும்பாலும் இரவு நேரங்களில் விஷம் கொடுத்தோ, தலையணையால் அமுக்கியோ கொலை செய்கிறார்கள்.
கள்ளக்காதலில் ஈடுபடுவது முன்பை விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. கணவர்களுக்குத் தெரியாமல் மனைவியரும், மனைவிக்குத் தெரியாமல் கணவரும் சகஜமாக ஈடுபட ஆரம்பித்து விட்டனர். இவர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் கொடுத்தால் இதுபோன்ற கொடூரக் கொலைகளை தடுக்க முடியும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.