எங்காவது இந்த அநியாயம் நடக்குமா?.. மக்களே நீங்களே ஒரு நியாயம் சொல்லுங்க!
மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்: எங்காவது இந்த அநியாயம் நடக்குமா? தமிழ்நாட்டிலதான் இருக்கோமா, இல்ல, ஃபாரீன்ல இருக்கோமான்னு தெரியல.
ஜனநாயகத்தில் எல்லாருக்குமே போராட உரிமை உண்டு. அது தப்பே கிடையாது. ஆனா எதுஎதுக்கு போராடறதுன்னு ஒரு விவஸ்தை கிடையாதா? இந்த வயிற்றெரிச்சல் செய்தியை படிங்க.
ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது சாலாமேடு பகுதி. இங்கு பிரதான சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த டாஸ்மாக் கடையினால் ரோட்டில் பெண்கள் நடமாட முடியவில்லை, ஸ்கூல் பிள்ளைகளுக்கு அச்சமாக இருக்கிறது, எப்ப பார்த்தாலும் திருவிழா கூட்டம் போல சரக்கு வாங்க கூட்டம் இருக்கிறது என்றெல்லாம் கூறி போராட்டம் செய்தனர். அதுவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயே போராடி, கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தார்கள்.
இப்படியா போராடுவது?
ஒருவழியாக 3 மாதங்களுக்கு முன்பு ஒரு டாஸ்மாக் கடை மூடப்பட்டுவிட்டது. இப்போது பிரச்சனை என்னவென்றால், வேறு டாஸ்மாக் கடை தூரமாக இருக்கிறதாம், அதனால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், போராட்டம் நடத்தியதே பெண்கள்தான்.
5 கிலோ மீட்டர்
தங்கள் கணவன்மார்கள் ரொம்ப தூரம் சென்று சரக்கு வாங்கி வருகிறார்களாம். அதுவும் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று சரக்கு வாங்க சிரமப்படுவதை தங்களால் பொறுத்து கொள்ளவே முடியவில்லையாம். போதையில் கிடக்கும் கணவர்களை தேடவும் முடியவில்லையாம். பக்கத்திலே டாஸ்மாக் இருந்தால், குடிச்சிட்டு ஊருக்குள்ளேயே எங்காவது விழுந்து கிடப்பாங்களாம். தேடிப்போய் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமாம். அதனால் குடிகாரர்களின் மனைவிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயம் கேள்விப்பட்டு, போலீசார் விரைந்து வந்தனர். கூட்டமாக கூடி போராடிய பெண்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸ்காரர்களிடமே அந்த பெண்கள் சண்டைக்கு போய்விட்டார்கள்.
தற்கொலை எச்சரிக்கை
இதனிடையே கடையை மூடியே தீரவேண்டும் என்று ஒருகாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், விஷயத்தை கேள்விப்பட்டு போராட்ட இடத்துக்கு வந்துவிட்டார்கள். மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்று அவர்கள் ஒருபுறம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் டாஸ்மாக்கை திறக்க வேண்டும், மற்றொருபுறம் திறக்கக்கூடாது என்று பெண்களே இரண்டு தரப்பிலும் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஒரு தரப்பினர், மீண்டும் டாஸ்மாக்கை திறந்தால் தீக்குளித்து தற்கொலையே செய்துகொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த இரு தரப்பு பெண்களிடமும் மாட்டிக் கொண்டு செய்வதறியாது போலீசார் விழித்து நின்றனர்.
நாடு உருப்படுமா
இப்படி ஒரு போராட்டம் தமிழகத்திலா என்று ஆச்சரியமாக உள்ளது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்கிற வாதத்தையும், வார்த்தையையும் நிரூபிக்க வேற விஷயமே இந்த பெண்களுக்கு கிடைக்கவில்லையா? போராடி டாஸ்மாக் கடையை கேட்கும் பெண்களின் குழந்தைகள் நிலை நாளை என்னவாக இருக்கும்? குடி குடியை கெடுக்கும் என்று காலங்காலமாக சொல்லி வந்தவர்கள் எல்லாம் என்ன முட்டாள்களா? எவ்வளவோ தலைகீழாக நின்று பார்த்தும், எவ்வளவோ உயிர்கள் குடியால் அநியாயமாய பறிபோயும், அரசு டாஸ்மாக்கை மூடவே மாட்டேன் என்று ஒற்றை காலில் நிற்கிறது. இதில் பெண்களே சேர்ந்து கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று போராடினால் இந்த நாடு உருப்படுமா?