11 மாடிக் கட்டடத்தை குண்டு வைத்துத் தகர்க்க அமைதி இயக்கம் எதிர்ப்பு
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் தரைமட்டமாகி சரிந்த 11 மாடிக் கட்டடத்திற்கு அருகே கட்டப்பட்டுள்ள இன்னொரு 11 மாடிக் குடியிருப்பை குண்டு வைத்தத் தகர்க்கும் முடிவுக்கு உலக அமைதி மற்றும் ஒற்றுமை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது அமைதியை சீர்குலைக்கும் செயல் என்று அது வர்ணித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான கிஷோர் குமார் என்பவர் கூறுகையில், மவுலிவாக்கத்தில் கடந்த 28ம் தேதி 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். விதிகளை மீறி கட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டடமும் இடியும் நிலையில் உள்ளதாக, அதை ஆய்வு செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கட்டடத்தை குண்டு வைத்து இடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு வைத்து வெடிப்பது என்பது அமைதியை சீர்குலைக்கும் செயல். இதனால் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, விபத்து குறித்து முழுமையான விசாரணை முடியும் வரை இந்த கட்டடத்தை இடிக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு இடிக்கும் பட்சத்தில் குண்டு வைத்து இடிப்பதை தவிர்த்து, பல்வேறு சட்ட நிபுணர்கள், கட்டட நிபுணர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரை கொண்டு வேறு மாற்று வழியில் இடிப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றார் அவர்.