மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வயசு ஒன்று.. என்ன மாற்றத்தைக் கண்டோம்?
பிரதமர் நரேந்திர மோடியின் உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகான ஓராண்டில் என்ன மாற்றம் நடந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
சென்னை : இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு விவகாரத்திற்குப் பின்னர் ஓராண்டில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்பதை பார்க்கலாம்.
நவம்பர் 8, 2016. இரவு 8 மணி பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய அந்த உரையை யாராலும் மறக்க முடியாது. ஊழல், கருப்புப்பணம், தீவிரவாதம், போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் விதமாக உயர் மதிப்புடைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவித்தார்.
மேலும் இந்த அறிவிப்பால் வங்கி, ஏடிஎம்களில் சில நாட்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மோடி கூறினார். ஆனால் சுமார் 2 மாதங்கள் மக்கள் பணம் கிடைக்காமல் திண்டாடிப் போயினர். ஏடிஎம் வாசலிலும், வங்கி வாசலிலும் கிடையால் கிடந்து குறைந்தபட்ச தொகையை மட்டுமே அவர்களால் பெற முடிந்தது.
ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு
தீவிரவாத அமைப்புகளின் பண நடமாட்டம் இந்த அறிவிப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் உண்மையில் பிரதமரின் அறிவிப்பால் நடந்தது என்வென்றால் ஆசியாவின் 3வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் ரூபாய் தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
பணமதிப்பிழப்பால் குறைந்த செல்வாக்கு
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் ஊழலை ஒழிப்பேன் என்று பாஜக முன்எடுத்த பிரச்சாரமே 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது. 2019ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்தே காணப்படுகிறது என்றே சொல்லாம். அதற்கு முக்கியக் காரணமாகிப் போனது பணமதிப்பிழப்பு நடவடிக்கை.
ரியல் எஸ்டேட், தங்கத்தில் பதுக்கல்
கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பது என்பது பணமதிப்பிழப்பு என்ற ஒரு நடவடிக்கையால் மட்டுமே முற்றுபெற்றுவிடாது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் கருப்புப் பணம் என்பது பணத்தை மட்டும் குறிப்பது அல்ல ரியல் எஸ்டேட் மற்றும் தங்கமாகவும் அவை பதுக்கப்படுகின்றன.
திரும்பப் பெற்ற பழைய தாள்கள் எவ்வளவு
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கருப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்ற விவரம் அரசிடமோ ரிசர்வ் வங்கயிடமோ இல்லை. சொல்லப்போனால் திரும்பப் பெற்ற பழைய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கூட ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை. பழைய ரூபாய் தாள்களை எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏறத்தாழ 99 சதவீத தாள்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்பதும் தான் ரிசர்வ் வங்கியின் தகவல்.
டிஜிட்டல் மயத்திற்கு மாறிய மக்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தோற்ற மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் மக்கள் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்திற்கு மாறினர். எனினும் இது பெருநகரங்கள், 2ம் நிலை நகரங்களில் மட்டுமே கைகொடுத்தது என்று சொல்லலாம். ரூபாய் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒரு ஸ்மார்ட் மூவ் என்றும் இதனால் கருப்புப் பண நடமாட்டம் ஓரளவு குறைந்திருக்கிறது என சொல்லாம் என்பதுமே பொருளாதார ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
குறைந்த தீவிரவாத செயல்
இதே போன்று பண நடமாட்டம் குறைந்ததால் ஜம்மு காஷ்மீரில் அரங்கேறி வந்த கலவரங்கள் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் தீவிரவாத அமைப்புகளின் பண நடமாட்டம் குறைந்ததால் காஷ்மீரில் நடைபெற்று வந்த வன்முறை சம்பவங்கள் பெருமளவில் குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.