சென்னையில் நாளை 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் மெகா யோகா தின கொண்டாட்டம்!
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்கு ஈஷா யோகா மையம் ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதில் பங்கேற்கிறார்.
இந்தியாவின் மன மற்றும் உடல் வளக்கலையான யோகாவை உலக அளவுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு தொடர் முயற்சிகள் எடுத்தது. இதன் விளைவாக, ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினமாக கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.
முதலாவது, சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. எனவே, நமது பாரம்பரியத்தை உலகிற்கு வெளிச்சம்போட இந்த தினத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு முழு வீச்சில் தயாராகிவருகிறது.
Yoga Up for the Yoga Day shri VenkiahNaidu participating with Sadhguru @ YMCA Grounds Nandanam Chennai All are welcome contact 8300011000
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) June 20, 2015
டெல்லி ராஜபாதையில் மிக பிரமாண்டமாக யோகாசன நிகழ்ச்சி நாளை நடக்கிறது, பிரதமர் மோடி அதில் பங்கேற்கிறார். அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார். சென்னையில், ஈஷா யோகா மையத்தின் பங்களிப்புடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக ஈஷா யோகா மையத்தின் இயக்குநர் கோபால் கூறியதாவது: உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு நேரடியாக பயிற்சி அளிக்கிறார்.
அன்று காலை 6.15 மணிக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கும். மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் என்றார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும், தனது டிவிட் ஒன்றில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய கலையை உலக பிரபலப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு தனது மற்றொரு டிவிட்டில் நன்றியை தமிழிசை தெரிவித்துள்ளார்.