சென்னை: தடுப்புச் சுவரில் பைக் மோதி பாடி மேம்பாலத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி
சென்னை: சென்னை பாடி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுப்புச் சுவரில் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சென்னை கொரட்டூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்த முகமது அப்துல்லா என்பவரின் மகன் ஹசார் (20). இவர் அரும்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டேரியில் இருந்து, கோயம்பேடுக்கு ஹசார் வேகமாக சென்று கொண்டிருந்தார். பாடி மேம்பாலத்தில் சென்றபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
தலைகீழாக விழுந்த இளைஞர்
இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் ஹசார் தூக்கி வீசப்பட்டதோடு, 30 அடி உயர பாலத்திலிருந்து அந்தரத்தில் தலைகுப்புற கீழே விழுந்தார். அப்போது அதிர்ஷ்டவசமாக பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் பின்பக்க இருக்கையில் மோதியபடி, கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
வராத 108 ஆம்புலன்ஸ்
உயிருக்கு போராடியடி துடித்துக் கொண்டிருந்த ஹசாரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சுக்காக சுமார் 30 நிமிடம் காத்திருந்தனர். ஆனாலும் ஆம்புலன்ஸ் வரவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை
ஹசாரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றை பொதுமக்கள் மடக்கி நிறுத்தினர். பின்னர் ஹசாரை இளைஞர்கள் தூக்கி அதில் ஏற்றினர். பின்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிரிழந்த ஹசார்
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பலமுறைவிபத்து
சென்னையில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களில் தடுப்பு சுவர்கள் சுமார் 3 அடி உயரமே உள்ளது. இதனால் சாலை தடுப்புகளில் கட்டுப்பாட்டை இழந்து மோதும் வாகனங்கள் நேரடியாக கீழே விழுகின்ற நிலை உள்ளது. சிறிய விபத்துக்கள் என்றாலும், கீழே விழுந்து படுகாயம் அடைய வேண்டிய சூழல் உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலும், இதேபோன்று வாகன ஓட்டி ஒருவர் தடுப்பு சுவரில் மோதி பாலத்திலிருந்து கீழே விழுந்தார்.
தடுப்புசுவரை அதிகரிக்க கோரிக்கை
இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு, எழும்பூர் மேம்பாலத்தில் மாநகர பேருந்து ஒன்றில் படிகட்டில் தொங்கியபடி சென்ற வாலிபர் ஒருவர் பிடியை தவறவிட்டு, தடுப்பு சுவர் உயரம் குறைவாக இருந்ததால் பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
பாலத்தின் தடுப்பு சுவர் உயரத்தை அதிகரித்தால் மட்டுமே தடுப்பு சுவர்களில் மோதும் வாகனங்கள் பாலத்திலிருந்து தவறி கீழே விழுவதை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications