டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்.. சென்னை வளசரவாக்கத்தில் பரபரப்பு
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் சென்னை வளசரவாக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் இந்தப் பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னை: டாஸ்மாக் கடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது. சென்னை வளசரவாக்கத்தில் மதுக்கடைக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பின்னர், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. இதனையடுத்து மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாநில அரசு புதிய மதுக்கடைகளை திறந்து வருகிறது.

இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. எங்கெல்லாம் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் லட்சுமி நகரில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. திடீரென இங்கு கூடிய தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின்படி மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications