கோகுல்ராஜை கொல்ல பயன்படுத்திய கத்தி பறிமுதல்: வேலூர் தனிமை சிறையில் யுவராஜ் அடைப்பு
வேலூர்: கோகுல்ராஜை கொலை செய்ய யுவராஜ் பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் கடந்த 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் திங்கட்கிழமையன்று நாமக்கல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி மலர்மதி உத்தரவிட்டதையடுத்து தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
7 நாட்களும் யுவராஜிடம் துருவித் துருவி விசாரித்தும் முதல் இரண்டு நாட்கள் யுவராஜ் வாய் திறக்கவே இல்லையாம். மூன்றாவது நாள், ‘நான் அந்தப் பையனை (கோகுல்ராஜ்) திட்டியது உண்மைதான். இப்படி பெண்களை ஏமாத்துறியே. உனக்கெல்லாம் அக்கா தங்கச்சி கிடையாதா? இந்தப் பிழைப்புக்கு எங்காவது போய் செத்துடலாம் என்று மிரட்டியதும் உண்மை. அப்புறம் நான் காரில் வீட்டுக்குப் போயிட்டேன். அவன் எப்படி செத்தான் என்றெல்லாம் தெரியாது. ஒருவேளை நான் திட்டியதால் செத்துப் போயிட்டானோ? என்ற பயத்தில்தான் தலைமறைவாக இருந்தேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்.
அப்ரூவர் ஆன அருண்
யுவராஜின் கார் டிரைவர் அருணிடம், விசாரணை நடத்திய போது, அனைத்து உண்மைகளையும் யுவராஜ் சொல்லிவிட்டார். நீ அடித்ததில்தான் கோகுல்ராஜ் இறந்தாராம். உண்மையைச் சொல்லி விடு. இல்லையென்றால், உண்மையைக் கண்டறியும் சோதனைக்கு உன்னை உட்படுத்துவோம். இப்போதே உண்மையைச் சொல்லிவிட்டால் உனக்கு நல்லது என்று மிரட்டவே, அருண் அப்ரூவராக மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லி விட்டாராம்
கொலை நடந்தது எப்படி
சம்பவ தினத்தன்று திருச்செங்கோடு மலைக்கோயிலிலிருந்து கோகுல்ராஜின் கண்ணைக் கட்டி யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் கொங்கணாபுரத்திற்கு கடத்தி சென்று, அங்கிருந்து ஒரு ஜீப்பில், சங்ககிரி அருகே உள்ள ஒக்கிமலை என்ற இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து தான், தற்கொலை செய்து கொள்வதாக கோகுல்ராஜிடம் மிரட்டி கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதாக அவரை பேச வைத்து, வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர் அதை வாட்ஸ்அப்பில் பரவ விட்டுள்ளனர்.
கத்தியால் அறுத்து கொலை
இதையடுத்து அவரை பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கோகுல்ராஜ் தப்பியோட முயன்றபோது அவரை விரட்டி பிடித்து, துண்டால் கழுத்தை நெரித்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, சடலத்தை அங்கேயே போட்டு விட்டு வந்ததாக விசாரணையின் போது யுவராஜ் தெரிவித்ததாக சிபிசிஐடி போலீசார் கூறினர்.
ஆவேசப் பேச்சு
கோகுல்ராஜ் கொலை சம்பவத்துக்கு முன்பு சங்ககிரியில் நடந்த ஒரு கூட்டத்தில் யுவராஜ் ஆவேசமாக பேசியுள்ளார். அதில் தனது சமுதாய பெண்களிடம் பழகும் வேறு சமுதாய இளைஞர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பேசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கத்தி பறிமுதல்
கோகுல்ராஜை கொலை செய்யப் பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.