மணக்கோலத்தில் மெயின் ரோட்டில் காத்திருந்த ஜோடி.. கவனித்த ஸ்டாலின்.. திடீரென வந்து.. செம்ம சர்ப்ரைஸ்!
திருவாரூர்: திருக்குவளை செல்லும் வழியில் பின்னவாசலில் எஸ்.ஆர்.சோப்ரா - எஸ்.இரமா ஆகியோர் திருமண மண்டபத்தின் முன்பாக மணக்கோலத்தில் நின்றதை கவனித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். முதல்வர் திடீரென வந்து நடத்தி வைத்ததால் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக அந்த குடும்பத்தினருக்கு அமைந்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தங்களது சொந்த ஊரான திருக்குவளைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரும் காரில் சென்று கொண்டிருந்தனர்

முதல்வர் செல்லும் வழி
திருவாரூர் அருகே பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் காரில் அவர்கள் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரை சேர்ந்த எஸ்.ஆர்.சோப்ரா - எஸ்.இரமா ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் வருவதை பார்த்து அவரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.

திருமணம் நடக்க வேண்டும்
மணக்கோலத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த ஜோடியை கண்டதும் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்கள்.

வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறார். பின்னர் அவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருக்குவளை சென்றார். அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

குடும்பத்தினர் உற்சாகம்
திருமண மண்டப வாசலில் முதல்-அமைச்சர் தலைமையில் தங்களது திருமணம் நடந்ததால் புதுமண ஜோடி இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பயண திட்டத்தில் திட்டமிடாத ஒரு நிகழ்ச்சி தான் இந்த திருமணம் என்று கூறப்படுகிறது. ஸ்டாலின் நடத்திய வைத்த காரணத்தால் உலகறிய நடந்த திருமணமாக மாறிவிட்டது முதல்வர் ஸ்டாலின் நடத்திவைத்த திருமணம் என்று காலம் காலமாக கூறி மகிழ்வார்கள் என்று அப்பகுதியினர் பூரிக்கிறார்கள்.

பதவி அல்ல, இது பொறுப்பு
இதனிடையே தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருக்குவளை இல்லத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு என்று கலைஞர் வழியில் குறிப்பெழுதி திமுக தொண்டர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தார்.












Click it and Unblock the Notifications