அதிமுக ஆபீசுக்கு போக ஓபிஎஸ்-க்கே வழி கிடையாது! நானும் போகப் போறேன் என சசிகலாவும் அடம்!
தஞ்சாவூர் : அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நானும் செல்வே என சசிகலா கூறியிருக்கிறார்.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அதிமுகவில் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வென்ற இபிஎஸ் கோஷ்டி
அதேநாளில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். அப்போது இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகளிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் பலரும் படுகாயமடைந்தனர். இதனால் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னர் இருதரப்பும் மாறி மாறி நீதிமன்றப் படிகளேறின. இந்த சட்டப் போராட்டங்களில் தற்போது வரை இபிஎஸ் கோஷ்டிதான் வெற்றி பெற்ருள்ளது.

ஓங்கிய இபிஎஸ் கோஷ்டி கை
அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதனடிப்படையில் அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓபிஎஸ் கோஷ்டி உச்சநீதிமன்றம் வரை போராடியது. அங்கும் ஓபிஎஸ்-க்கு தோல்விதான் கிடைத்தது. இதனால் அதிமுகவில் இபிஎஸ் கோஷ்டியின் கைதான் ஓங்கி உள்ளது.

ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம்
இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா, எம்ஜிஆர் பேனர்கள் இன்று வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் இன்று தாமும் அதிமுக அலுவலகத்துக்கு செல்வேன் என சசிகலா அறிவித்துள்ளார்.

சசிகலாவின் பிடிவாதம்
அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிவித்துக் கொள்ளும் சசிகலா, தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது, அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். ஒன்றுபட்ட அதிமுகவுக்கு நானே தலைமை ஏற்பேன். அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் விரைவில் செல்வேன் என்றார். ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு முட்டி மோதிப் பார்த்தும் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல வழியே இல்லாத நிலையில் சசிகலா கொளுத்திப் போட்டிருப்பது அதிமுகவின் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications