கும்பகோணத்தில் துயரம்; பசுவைக் காப்பாற்றும் முயற்சியில் ரயில் மோதி சிறுவன் பலி..
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தான் அழைத்து வந்த மாடு ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க முயன்று , தன் உயிரையும் கொடுத்துள்ளான் சிறுவன் திலீப் குமார்.
Recommended Video
மாட்டை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டுவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலிப்குமார் (14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தான்.

பதறிய சிறுவன்
இந்நிலையில் நேற்று தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றது. அப்போது மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் சென்றதால், மாடு அடிபட்டு இறந்து விடும் என சிறுவன் பதறினான்.

சிறுவன் முயற்சி
எப்படியாவது மாட்டை காப்பாற்ற வேண்டும் என தண்டவாளத்தில் இறங்கி அங்கிருந்து விரட்டியுள்ளான். ஆனால் மாடு அசையாமல் தண்டவாளத்தில் நின்று இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தான் வைத்திருந்த சாட்டை குச்சியால் மாட்டை அடித்து தண்டவாளத்தின் எதிர்புறம் வேகமாக கீழே இறக்கிவிட்டுள்ளான்.

உயிரிழப்பு
பின்னர் தண்டவாளத்தில் இருந்து இறங்க முயன்ற சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். மாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் ரயில் நெருங்கிக்கொண்டிருப்பதை கூட கவனிக்காமல் இருந்த சிறுவன் மாட்டை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை பரிதாபமாக இழந்தான்.

தஞ்சையில் சோகம்
இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications