கதை வேறுமாதிரி போகுதே.. அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெறுமா? பாஜகவின் சிடி ரவியின் பதில் இதுதான்!
தஞ்சை: அதிமுக கூட்டணியில் அமமுக இடம்பெறுமா எனப்தை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என்று பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி கூறினார்.
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மையில் உத்தேச பட்டியல் கூட வெளியானது.
சசிகலா அழைப்பு
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, திமுக தான் நமது பொது எதிரி. அதை தோற்கடிக்க நாம் இணைந்து செயல்படலாம் என அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது சாத்தியமில்லை என்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
எடப்பாடியார் மறுப்பு
இந்நிலையில் அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்து சசிகலாவும், தினகரனும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவரையிலும் எந்த எம்எல்ஏக்களும் தினகரன் பக்கம் செல்லவில்லை. இருப்பினும், திமுகவை தோற்கடிப்பதற்காக, அமமுகவையும் அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் அதற்காக இருதரப்புக்கும் மறைமுக அழுத்தம் தருவதாக சொல்லப்பட்டது. ஆனால் எடப்பாடியார் சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது.
ஓபிஎஸ் கண்டுகொள்ளவில்லை
இதற்கிடையில், சசிகலாவை ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸ்-ஐ ஆதரிப்போம் என்றும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எந்த அழுத்தமும் பாஜக தரப்பில் தரப்படவில்லை எனவும் தினகரன் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஆனால் ஓபிஎஸ் தினகரனின் அழைப்பை கண்டுகொள்ளவில்லை.
அதிமுக முடிவு செய்யும்
இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பா.ஜ.கட்சியின் சட்டமன்றத் தொகுதி ஆய்வு கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தது இரண்டு இலக்கங்களில் அதிமுக கூட்டணியில் பா.ஜ. சீட் கேட்கிறோம். தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் பா.ஜ.க கூட்டணி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் மூத்த தலைவர்கள். சசிகலாவின் பலமும், பலவீனமும் அவர்களுக்கு தெரியும். எனவே, அமமுக கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும்" என்றார்.
ஒபிஎஸ் இபிஎஸ் முடிவு
கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் முருகன், சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும் என்றார். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார். கோவையில் பேசும் போது அமமுகவை சேர்ப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதன் மூலம் அதிமுக நினைத்தால் மட்டுமே அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முடியும் என்ற நிலை இருப்பது தெளிவாகிறது.