மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு நரபலி.. தஞ்சையில் 6 மாத குழந்தையைக் கொன்ற கொடூரம்..!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 52 வயது முதியவரின் உயிரைப் பாதுகாப்பதாக எண்ணி, 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நசுருதீன் எனபவரது மனைவி சாலிகா. இவர்களுக்கு ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை ஹாஜரா தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது
இந்நிலையில் குழந்தை ஹாஜரா நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் மூலம் தகவல் அப்பகுதியில் பரவியது. இதையடுத்து சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மல்லிப்பட்டினம் சென்று விசாரணையை தொடங்கினர். இதில் முதல்கட்ட விசாரணையில் குழந்தை கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை
இதையடுத்து அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து குழந்தையின் மர்ம மரணம் குரித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை ஹாஜரா தண்ணீரில் மூழ்கடித்து நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கேரள மந்திரவாதி
குழந்தையின் தகப்பனார் நசுருதீனின் சித்தப்பாவான 52 வயதான அசாருதீன் என்பவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிபட்டினத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த மந்திரவாதி முகமது சலீம் என்பவரை அசாருதீன், அவரது மனைவி சர்மிளா சந்தித்துள்ளனர். அதில் உடல்நலக் குறைபாடு, குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உயிர்பலி கொடுத்தால் சரியாகிவிடும் என்று கேரள மந்திரவாதி முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
உயிர்ப்பலி
இதை நம்பி கடந்த சில தினங்களுக்கு முன் அசாருதீன் சேவல்களை பலி கொடுத்துள்ளனர். ஆனாலும், பிரச்சினை தீரவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மறுபடியும் கேரள மந்திரவாதியை சந்தித்துள்ளனர. அப்போது முகமது சலீம் வீட்டில் உள்ள யாரயாவது நரபலி கொடுத்தால் பிரச்சினை சரியாகி விடும் என்றும், அதனையும் உடனடியாக செய்ய வேண்டும் என சொன்னதாக கூறப்படுகிறது.
குழந்தையை கொன்ற கொடூரம்
இந்நிலையில் குழந்தை ஹாஜராவை கொன்றால் தான் பிரச்சினை தீரும் என நினைத்த சர்மிளா, புதன்கிழமை இரவு குழந்தை ஹாஜரா தனது தந்தை நசுருதீன், தாய் சாலிகா ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்த போது யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள்
இதனையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் கணேஷ்வரன் உள்ளிட்டன் அரசு அலுவலர்கள் முன்னிலையில், 2 அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சடலத்தை புதைத்தனர். மந்திரவாதியின் தவறான அறிவுரை காரணமாக குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது