'வேறு வழியின்றி திருடி விட்டேன்'.. மனம்மாறி நகை, பணத்தை அப்படியே வைத்து விட்டு சென்ற கொள்ளையன்!
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது பரியாரம் கிராமம். கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக பரியாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்
பரியாரம் கிராமத்தில் உள்ள அஷரப் என்பவரது வீட்டில் சில நாட்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரம், 1 பவுன் நகை திருட்டு போனது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அஷரப் வீட்டின் வாசல் முன்பு 3 பெரிய கவர்கள் கிடந்தன.

மர்ம பார்சல்
திடீரென மர்ம பார்சல் கிடந்ததால் அதனை அச்சத்துடன் திறந்து பார்த்தபோது, அதில் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரொக்கப்பணம், 4.5 பவுன் தங்க செயின், 630 மில்லி கிராம் கம்மல், மோதிரம் உள்ளிட்டவை இருந்தன. இதனால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அதில் ஒரு கடிதமும் இருந்தன.அஷரப் குடும்பத்தினர் அந்த கடிதத்தை பிரித்து படித்தனர்.

மன்னிப்பு கோருகிறேன்
அதில், ''கொரோனா காலத்தில் வேறு வழியின்றி பல வீடுகளில் நான் திருடிவிட்டேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன். எந்தெந்த வீடுகளில் என்னென்ன பொருட்கள் திருடினேன் என்பதை இந்த கடிதத்தில் விவரமாக எழுதி வைத்துள்ளேன். தயவு செய்து அந்தந்த வீடுகளில் அவர்களுக்கு உரிய பொருட்களை கொடுத்துவிடுங்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.

மனம் மாறினான்
இவை அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டுபோன பணம் மற்றும் நகைகள் என்பது தெரியவந்தது. கடிதம் எழுதி வைத்த கொள்ளையன் அந்த பகுதியில் தொடர்ந்து கைவரிசை காட்டியுள்ளான். ஆனால் அனைத்தையும் திருடிய பிறகு கொள்ளையன் மனம் மாறி அவற்றை அஷரப் வீட்டின் வாசலில் வைத்து சென்றுள்ளான். இதைதொடர்ந்து அஷரப், அந்த பணம் மற்றும் நகைகளையும் அதில் இருந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்தார்.

மக்கள் ஆச்சரியம்
போலீசார் அவற்றை கோர்ட்டில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். கிடைத்த பணம், நகையை சுருட்டி செல்பவர்கள் மத்தியில் மனம்மாறி திருடிய பொருட்களை திருப்பி ஒப்படைத்த கொள்ளையனின் செயல் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications