தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள்..புதுபுது குழப்பங்கள்.. கிராமப்புறங்களில் உடனடி விழிப்புணர்வு தேவை
தேனி: கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே இன்னமும் தவறான புரிதல் அதிகமாக உள்ளது. சாமானிய மக்கள் பலரிடம் பேசியதில், ஒவ்வொருவரும் தடுப்பூசி குறித்து ஒவ்வொரு விதமான குழப்பத்தில் உள்ளார்கள். அரசு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்களை வீட்டுக்குள் முடக்க வைத்து , சுவாச பிரச்சினையை உருவாக்கி, நோய்வாய்பட வைத்து கொன்று வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் இன்று வரை எப்படி எல்லாம் பரவுகிறது என்பது பலருக்கும் புரியாத புதிர் தான்.
கொரோனா வந்தவர்களில் மிக தீவர நிலையில் நோய் பாதித்தவர்களை காப்பாற்றுவது மருத்துவர்களுக்கும் அரசுக்கும் பெரும் சவாலாக உள்ளது. நோய் தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அவர்கள் உயிர் பிழைக்க அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோய் முற்றி போகிறார்கள்
ஆனால் பலர் நோய் தொற்று முற்றிய பின்னரே மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அப்படி செல்பவர்களே கொரோனாவால் அதிகம் இறக்கிறார்கள் . இந்த உண்மையை மருத்துவர்கள் பலர் பல்வேறு தொலைக்காட்சி, ஊடகங்கள் பத்திரிகைகளில் சொன்னாலும் இன்னும் பல மக்களிடம் விஷயம் போய் சேரவில்லை.

சர்க்கரை வியாதி
அடுத்ததாக இன்னொரு முக்கியமான பிரச்சனை. கொரோனா நோய் வராமல் மக்களைக் காப்பதற்கு தடுப்பூசி மிகவும் அவசியம். ஆனால் இன்னும் கிராமப்புறங்களில் சிறிய டவுன் களிலும், படிக்காத பாமர மக்கள் சர்க்கரை வியாதி இருந்தால் தடுப்பூசி போடக்கூடாது.. ஆஸ்துமா இருந்தால் தடுப்பூசி போடக்கூடாது. சர்க்கரை வியாதிக்கு மருந்து சாப்பிட்டால் தடுப்பூசி போடக்கூடாது .. பிபி அதிகமாக இருந்தால் தடுப்பூசி போடக்கூடாது.. என்று பொய்யான விஷயங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இறக்கிறார்கள்
இதேபோல் தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வந்து இறந்து விடுவோம் என்ற வாய்வழியாக வரும் பொய்யான தகவல்களை மிகவும் பலமாக நம்புகிறார்கள். பக்கத்து வீட்டில் இருந்ததால் இப்படித்தான் தடுப்பூசி போட்டால் தடுப்பூசி போட்டபின் அவருக்கு காய்ச்சல் வந்தது இப்போது அவர் உயிருடன் இல்லை.. என்று தவறான வதந்திகளை நம்பி தடுப்பூசி போடாமல் பலர் இறக்கிறார்கள்.

விழிப்புணர்வு அவசியம்
குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பலர் இப்படியான பொய்யான நம்பிக்கைகளை நம்புவது என்பது பல்வேறு ஊர்களில் சர்வசாதாரணமாக உள்ளது. இச் செய்தியை எழுதும் நானே பல கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம் கேட்டபோது, தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை ஆழமாக நம்புகிறார்கள் என்பது தெரிந்தது. அரசு இவர்களுக்காக தடுப்பூசி எவ்வளவு அவசியம் என்பதை மிகத் தெளிவாக புரியும் படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எப்படியாவது தடுப்பூசியின் விழிப்புணர்வு அவர்களைப் போய் சேர்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவும் முயற்சி
கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என்று அமெரிக்கா , இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி , இத்தாலி , ரஷ்யா, சீனா , ஆஸ்திரேலியா , சிங்கப்பூர், இஸ்ரேல் மற்றும் கனடா உள்ளிட்ட உலக நாடுகள் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் வெற்றிகரமாக செயல்படுகின்றன. தடுப்பூசி ஒதுக்கீட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஏராளமான தடுப்பூசி பெற்று, மக்களை நோயிலிருந்து தப்பிக்க அவைகள் வழிவகை செய்கின்றன. இந்தியாவும் இது பணிகள் தீவிரமாக செயல்படுகிறது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுகிறது. விரைவில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் போடப்பட உள்ளது. கொரோனா மூன்றாவது அலை வராமல் தடுக்க தடுப்பூசி மிகவும் முக்கியம் என்று நம்பப்படுகிறது. எனவே தொற்று குறைந்த இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவது மட்டுமே வரப்போகும் பேரிடரை சமாளிக்க முடியும்.












Click it and Unblock the Notifications