கண்ணகி கோயில் கேரளாவுக்கு சொந்தமா? “என்ன இது?” அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேச்சால் கடும் கொந்தளிப்பு!
தேனி: கண்ணகி கோயில் கேரளாவிற்கு சொந்தமானது என அதிமுக எம்.பி ரவீந்திரநாத், நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சால் தேனி மாவட்ட மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
கண்ணகி கோவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்றும், கேரளா அத்துமீறி வருவதாகவும் தமிழக மக்கள் கூறி வரும் நிலையில், தேனி எம்.பியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
கண்ணகி கோவிலுக்கு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு ஆராய்ந்து வரும் நிலையில், அது கேரளாவுக்கு சொந்தமானது என தமிழக எம்.பி-யே பேசியிருப்பதற்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்டாவுக்கு 2 லட்டு.. நார்த்+சவுத்! 2 நாள் அடித்து ஆடப்போகும் மழை -சூறாவளியால் மீனவர்களுக்கு அலர்ட்
ரவீந்திரநாத் சர்ச்சை பேச்சு
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி அதிமுக எம்பியுமான ரவீந்திரநாத், நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசும்போது, கேரள எல்லைக்குள் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயிலை மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னமாக அறிவித்து மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில் சேர்த்து நிதி ஒதுக்கி, வருடத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கண்ணகி கோவில்
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கூடலூருக்கு தெற்கே உள்ள மங்கலதேவி மலையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது. எல்லையில் உள்ள கண்ணகி கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளிடையே பிரச்சனை உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழாவிற்கு ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி வழங்குகிறது.
தமிழ்நாடு vs கேரளா
எல்லைப் பகுதியில் இருக்கும் கண்ணகி கோவில் கேரளாவுக்குச் சொந்தம் என கேரள அரசு கூறுகிறது. கண்ணகி கோயில் உள்ள இடம் தமிழகத்திற்கு சொந்தமானது என்று தமிழர்கள் கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் கண்ணகி கோயில், கேரள எல்லைக்குள் இருப்பதாக அதிமுக எம்.பி ரவீந்திரநாத், நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரவீந்திரநாத் பேசிய பேச்சால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
திமுக எதிர்ப்பு
அதிமுக எம்.பி ரவீந்திரநாத்தின் இந்தப் பேச்சுக்கு தேனி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "தமிழக அரசு கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கும் போது இது தவறான பேச்சு" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில்
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க தமிழ்செல்வன், "கண்ணகி கோயிலுக்கு பளியன்குடியில் இருந்து சாலை அமைக்க தமிழக நெடுஞ்சாலைத்துறை, வனத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திற்கு சொந்தமான கண்ணகி கோயிலை புராதன சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி தேனி எம்.பி., லோக்சபாவில் பேசியது கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.
பலமுறை நிரூபணம்
தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் ரவீந்திரநாத் பேச்சுக்கு கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ரவீந்திரநாத் எம்.பிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கண்ணகி கோயில் கேரள எல்லையில் இருந்து 33 மீட்டருக்கு உட்புறம் தமிழக எல்லைக்குள் அமைந்திருக்கிறது என்பது இந்திய சர்வே துறையால் ஒரு முறைக்கு பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தம்
பிரிட்டிஷ் காலம் முதல் தமிழகத்திற்கு சொந்தமான நிலத்தில் கோயில் இருப்பதாக தெளிவாக இருக்கிறது. முழுக்க, முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. கேரள அரசுக்கும், கண்ணகி கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை. கண்ணகி கோயில் என்பது வழிபாட்டு உரிமை மட்டுமல்ல. தமிழக உரிமையும் என்பதால் ஒருமித்த கருத்தில் அனைவரும் நிற்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் ஓண்ணும் செய்யல
கண்ணகி கோயிலை சீரமைக்க வேண்டும் என்றும், கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க வேண்டும் என்றும் தேனி மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல முறை ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தேனி மாவட்டம் சென்றிருந்தபோது அவரிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கண்ணகி தேவி கோயிலுக்கு சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
கொந்தளிக்கும் தேனி மக்கள்
இந்த நிலையில் தான் நாடாளுமன்றத்தில் கண்ணகி கோவில் கேரளாவுக்கு உட்பட்டது எனப் பேசி இருக்கிறார் ரவீந்திரநாத். உங்கள் அப்பா ஓ.பன்னீர்செல்வம், நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க முன்வரவில்லை. இப்போது ஆட்சி மாறி திமுக அரசு ஆய்வுப் பணிகளை நடத்தி வருவதோடு, கண்ணகி கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படி பேசி இருக்கிறீர்களே என தேனி மாவட்ட மக்கள் ரவீந்திரநாத்துக்கு எதிராக கொந்தளித்துப் போய் உள்ளனர்.