ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு.. போடியில் பதற்றம்.. நடந்தது என்ன?
தேனி: தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரின் கார் கண்ணாடியை சில மர்ம நபர்கள் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வமும், திமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும் போட்டியிடுகின்றனர்.
அமமுக சார்பில் முத்துசாமி போட்டியிடுகின்றார். தேர்தல் பிரச்சாரத்தை போலவே வாக்குச்சாவடிகள் அனல் பறக்கிறது. காலை முதலே
மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.

வாக்களிப்பு
இன்று காலை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஜெயபிதீப், தாயார் பழனியம்மாள், ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி, ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி உள்பட அவரது குடும்பத்தினர் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

ஓபிஆர்
ஆனால் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் மட்டும் தனியாக வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து பெரியகுளத்தில் சில வாக்குச்சாவடிக பார்வையிட்டவர், நேராக போடிக்கு வந்தார் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டிக்கு வந்தார்.

அதிமுகவிர் கோபம்
அப்போது, மர்ம நபர்கள் சிலர் ரவீந்திரநாத் குமாரின் காரை குறிவைத்து கல் வீசி தாக்கினர். காரின் முன்பகுதி, பின்பகுதி. மற்றும் இடது பகுதி என எல்லா பக்கமும் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதைக்கண்ட அதிமுகவினர் கண்ணாடியை உடைத்தவர்களை துரத்தி அடித்தனர். இதனால் அங்கு சிறுது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது ரவீந்திரநாத் காரில் இல்லாததால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.

தங்கதமிழ்செல்வன் மறுப்பு
இதனிடையே கல்வீச்சு சம்பவத்திற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் மறுத்துள்ளார். ரவீந்திரநாத்தின் பாதுகாவலர்களுக்கும் அமமுகவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றும் அதை திமுகவினர் சமாதானம் செய்தனர் என்றும் கூறிய தங்கம், கல்வீச்சு சம்பவத்திற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications