கல்குவாரி விபத்தில் 2 பேர் மரணம்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி: அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது.
இதில் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 6 தொழிலாளர்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கினர். மேலும் அங்கு நின்ற லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று கயிறு மூலம் குவாரிக்குள் இயங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு பேர் மீட்பு
அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன்,40 நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய்,27 ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சடலமாக மீட்பு
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சுமார் 17 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடரும் மீட்புப்பணிகள்
இதற்கிடையே பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார்,30 தச்சநல்லூர் ஊருடையான்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் 23 ஆகிய 3 பேரை மீட்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர்.

2வது சடலம் மீட்பு
நேற்று காலை மீட்பு பணிகள் நடைபெற்ற போதே 2 முறை பாறைகள் சரிந்து விழுந்தது. எனினும் 47 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் நேற்றிரவு பாறை இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு நபர் நபர் சடலமாக மீட்கப்பட்டார். அது முருகன் என்பது தெரியவந்தது.

உரிமையாளர் கைது
இதற்கிடையே கல்குவாரி விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கர நாராயணன், ஒப்பந்த தாரர்கள் செல்வராஜ், குமார் மற்றும் மேலாளர் ஜெபஸ்டின் ஆகிய 4 பேர் மீதும் 3 பிரிவுகளில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சங்கர நாராயணன், ஜெபஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
இதனிடையே அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கல்குவாரியில் இறந்த முருகன், செல்வன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம், தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications