ஒட்டுமொத்த கிராமமே புற்றுநோயால் பாதிப்பு.. போலி டாக்டர்களால் விபரீதம்.. அச்சத்தில் ஆராய்ச்சிப்பட்டி!
தென்காசி: தென்காசி அருகே உள்ள ஆராய்ச்சிப்பட்டி எனும் கிராமத்தில், 26 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு அறிகுறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆராய்ச்சிப் பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!
ஆராய்ச்சிப்பட்டி கிராமத்தில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கிளம்பிய இந்த செய்தியை அறிந்து களத்தில் இறங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள அரசு மருத்துவர்களிடமும் இது குறித்து விசாரித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன், ''13 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. மார்பக புற்றுநோய் பரிசோதனையில் 13 பேருக்கு அதற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்து இருக்கிறது. இந்த 26 பேரையும் முழுமையாக பரிசோதித்து இவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து பிறகு மேல் சிகிச்சை தொடரப்படும்'' என்றார்.
பெரியப்பா தற்கொலை செய்துகிட்டாங்க
ஒரே கிராமத்தை சேர்ந்த 26 பேருக்கு புற்றுநோய் பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளதால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இது பற்றி சிலரிடம் இது பற்றி கேட்ட போது, அவர்கள் அளித்த தகவல் மேலும் அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது. அப்படி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், ''என் தம்பிக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் அவனுக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இப்போ ரொம்ப கஷ்டப்படுறான். நாங்கள் ஏழைக் குடும்பம் தான். கூரை வீட்டில் தான் வசித்து வருகிறோம். எனது தம்பியின் கஷ்டத்தை பார்த்து பெரியப்பா தற்கொலை செய்துகிட்டாங்க. ரொம்ம கஷ்டப்படுறோம். அரசாங்கம் தான் ஏதாவது உதவி செய்யனும்" என்று கூறியுள்ளார் .
அதே கிராமத்தை சேர்ந்த மற்றொருவர், விரதம் இருக்கும் பெண்கள் மாதவிடாய் தள்ளிப்போக வேண்டும் என்பதற்காக போலி மருத்துவர்களிடம் மாத்திரை வாங்கி சாப்பிடுவதாக கூறினர்.
போலி மருத்துவர்கள் காரணம்?
ஆராய்ச்சிப்பட்டியில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சாயமலை அல்லது சங்கரன் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும். இந்த இரு இடங்களும் ஏறத்தாழ 15 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு செல்ல சிரமப்படும் மக்கள் உள்ளூர் பகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்களிடம் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதே புற்றுநோய் பரவல் அச்சத்திற்கு காரணம் என்கிறார்கள்.
15 கி.மீட்டர் செல்ல வேண்டியுள்ளது
மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள ஆராய்ச்சிப்பட்டியை ஒட்டி 10-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்கள் அனைவரும் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 15 கி.மீட்டர் செல்ல வேண்டியுள்ளது. முறையான பேருந்து வசதியும் இல்லை என்பதால், நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோ வாடகைக்கு அமர்த்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயண செலவும் நேர விரயமும் அதிக அளவில் ஏற்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள், பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்லும், தாங்கள் இதனால் பெரும் சிரமப்படுவதாக கூறியிருக்கின்றனர். மேலும், தங்கள் கிராமத்திற்கு ஒரு மருத்துவமனை கட்டித் தரவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர்களின் கருத்து
ஆராய்ச்சிப்பட்டி கிராம மக்கள் மட்டும் அல்லாது சுற்று வட்டார பகுதிகளையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், இந்த நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவதோடு, போலி மருத்துவர்களையும் அரசு கண்டறிந்து களையெடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.