நெல்லை மாவட்ட நீதிமன்றங்களில் குவியும் சட்டவிரோத சொத்து பரிமாற்ற வழக்குகள்! பரபர பின்னணி
நெல்லை: ஊருக்குள் எட்டிப் பார்த்தால் எல்லாம் வயசானவர்கள்தான்.. இளைஞர்கள் எல்லோரும், சென்னை, கோவை, பெங்களூர், மும்பை, துபாயில்.. ஆனால், சிவில் நீதிமன்றங்களில் என்னவோ சொத்து வழக்குகள் வரிசைகட்டி பைசலுக்காக காத்திருக்கின்றன.. ஆம்.. இதுதான் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நீதிமன்றங்களின் நிலவரம்.
உதாரணத்திற்கு.. நெல்லை மாவட்டத்திலுள்ள, வள்ளியூரில் உள்ள நீதிமன்றத்தால் விசாரித்து தீரவில்லை என பக்கத்திலேயே ராதாபுரத்தில் புதிய நீதிமன்றம் திறக்கும் அளவுக்கு குவிந்துள்ளன வழக்குகள். இத்தனைக்கும் இரு ஊர்களும் சிறிய டவுன்கள்தான்.
அப்படி என்ன சொத்து வழக்குகள், ஏன் இங்கு மட்டும் ஒரே மாதிரியான சொத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன. விஷயம் இதுதான்: நெல்லையின் நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை வட்டாரங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகள் உட்பட தென் மாவட்டங்களில் பல தசாப்த காலமாக மழை பொய்த்துப்போயுள்ளதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து குடிக்க கூட நல்ல தண்ணீர் கிடைக்காத நிலையில் பிழைப்பு தேடி இளைஞர்கள் தூரத்து ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம் பெயர ஆரம்பித்துவிட்டனர். ஒரு பக்கம் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை, இன்னொரு பக்கம் தொழிற்சாலைகள் இல்லை. எனவே அவர்களும் என்ன செய்வார்கள் பாவம். எனவே பல நெடுங்காலமாக முதியவர்கள் மட்டுமே இங்குள்ள கிராமங்களில் வசிக்கிறார்கள். வேலை பார்ப்பவர்களும், பிற ஊர்களில் தொழில் செய்வோர்களும்,
ஊர் திருவிழா அல்லது பொங்கல் பொன்ற பொது விழாக்களுக்கு மட்டுமே தங்கள்
சொந்த ஊர் செல்வது வழக்கம். மிஞ்சி போனால் 3 நாட்கள்தான். பிறகு வழக்கமான
பணிக்காக அவர்கள் வண்டி கட்டி கிளம்புவது வாடிக்கை.
இந்த நிலையில்தான், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் எட்டிப்பார்க்க ஆரம்பித்தன, கடல் மணலில் இருந்து தாதுக்களை பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள். இவை மணல் விழுங்கிகள் என்றால், அடுத்ததாக, மலை விழுங்கி மகாதேவன்கள் போல, மலைகளை உடைத்து ஜல்லிகளை கேரளத்திற்கு ஏற்றுமதி செய்யும், நிறுவனங்களும் கணிசமாக பெருகின. உள்ளூர் முதியவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு இவர்கள், வரிசையாக நிலங்களை வாங்கி குவிக்க தொடங்கினர். பணத்தாசை காரணமாக ஊரிலுள்ள சில முதியவர்களும் குடும்பத்திற்கு
சொந்தமான பனை மர தோட்டங்கள், முந்திரி மர தோட்டங்கள் போன்றவற்றை நைசாக இந்த
நிறுவனங்களுக்கு கைமாற்றி விட்டுவிட்டனர். ஆனால் பாவம்.. குடும்ப முன்னேற்றத்திற்காக ராத்திரி, பகலாக வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வேலை பார்க்கும் அடுத்த தலைமுறையினருக்கு, அதாவது, மகன்கள் அல்லது பேரப் பிள்ளைகளுக்கு இந்த சதி வேலைகள் தெரியவில்லை.
இடைத்தேர்தல் : திமுக கூட்டணிக்காக களமிறங்கிய 6 அமைப்புகள்.. ஃபார்வர்டு பிளாக், அதிமமுக ஆதரவு!
கொடுமை என்னவென்றால், பேரன்களுக்கு சே சேர வேண்டும் என்று தாத்தாக்களால் செட்டில்மென்ட் செய்யப்பட்ட சொத்துக்களை கூட தகப்பன்மார்கள் விற்பனை செய்ய, அதை தெரிந்தே இந்த நிறுவனங்களும் வாங்கி குவித்துள்ளன. தங்களிடம் அரசியல் பலம், ஆள் பலம், பண பலம் இருப்பதால், சொத்துக்கு உரிய பேரன்களோ, மகன்களோ கேட்டால் தட்டி வைக்கலாம் என்ற தடித்தனம் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சொத்துக்கு உரியவர்களுக்கு தெரியும் முன்பாக, மண்ணையோ, கல்லையோ வாரி எடுத்துவிடலாம் என்ற வஞ்சக சூழ்ச்சிகளும் இதன்
பின்னணியில் உள்ளன. செட்டில்மென்ட் சொத்து என்பது உயிலை விடவும் வலிமையானது. ஆனால் அதையே அசால்டாக வாங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்களின் ஆதிக்கம் அத்தகையதாக உள்ளது. ஆனால் காலம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா, இது சட்டத்தின் ஆட்சி நடைபெறும் தேசம், இங்கு அநீதிகள் அதிக நாள் நீடிக்க முடியாது. அதுதான் இப்போது தென் மாவட்டங்களில் நடந்து வருகிறது.
உண்மை தாமதமாக தெரிந்தாலும், சொத்துக்கு உரிமையானவர்கள் தங்கள் தந்தை, தாத்தா உள்ளிட்டோருக்கு எதிராகவும், சொத்துக்களை வாங்கியவர்களுக்கு எதிராகவும், நீதிமன்றங்களில் ஒரிஜினல் சூட் வழக்குகளை வரிசையாக தாக்கல் செய்து வர ஆரம்பித்தனர். இதனால்தான் தென் மாவட்ட நீதிமன்றங்களில் ஒரே மாதிரியான இதுபோன்ற வழக்குகள் நிறைய நிலுவையில் உள்ளன. இதில் தீர்ப்பு வந்துள்ள பல வழக்குகளில், சொத்துக்களை இப்படி முறைகேடாக வாங்கியது தவறு
என்பதால் உரியவர்களுக்கு திருப்பித் தர நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் வயிறுகளில் பால் வார்த்துள்ளனர். சமீப காலமாக மத்திய, மாநில அரசின் நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புதிதாக இப்படி முறைகேடாக சொத்துக்கள் வாங்குவது குறைந்துள்ளதாம். ஆனால், பழைய வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதால், வேகவேகமாக நடக்கிறது விசாரணைகள் என்கிறார்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்த பல முன்னணி வழக்கறிஞர்கள்.