அன்பு மகளுடன் 10 நிமிடம் விளையாட நேரம் இல்லை.. மூச்சு நின்றுவிடும்.. எஸ்ஐ ஆடியோ உருக்கமான பின்னணி
நெல்லை: மன அழுத்தம் மோசமான நோயாக மாறி இந்த சூழலில், காவல்துறையினர் மன அழுத்தம், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமை போன்ற பிரச்சனையால் விரக்தியில் இருக்கிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் அருணாச்சலம். தன்க்கு மனஅழுத்தம் அதிகமாகி தனது உயிர் மூச்சு நின்று விடலாம் என்றும் ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. அன்பு மகளுடன் 10 நிமிடம் விளையாட கூட நேரம் இல்லை என்றும் கூறி வெளியிட்ட ஆடியோ காவல்துறையினரின் மனஅழுத்தத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் உயரதிகாரிகளின் அதிகாரப் போக்கு காரணமாக பல்வேறு காவலர்கள் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க காவல்துறை தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட தற்கொலை சம்பவம் அவ்வபோது அரங்கேறி தான் வருகிறது.

டிஜிபி உத்தரவு
குறிப்பாக சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி சைலேந்திரபாபு காவலர்கள் வாரம் ஒருமுறை விடுமுறை எடுக்க உத்தரவிட்டார். ஆனாலும் பல்வேறு காவல் நிலையங்களில் இந்த உத்தரவு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் நெல்லையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், மன அழுத்தம் காரணமாக நான் செத்து விடலாம் என்று பேசி ஆடியோ வெளியிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அருணாச்சலம் பேச்சு
நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் அருணாச்சலம். அண்மையில் வெளியிட்ட ஆடியோவில், நான் சிறுவயதிலிருந்தே காவல் பணியை நேசித்து வந்ததால் என்னை வேறு எந்த பணிக்கும் தயார்படுத்தவில்லை அதன விளைவாக 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் ஆகவும், 2011ம் ஆண்டு உதவி ஆய்வாளராகவும் தேர்ச்சி பெற்றேன். நான் வேலை செய்த இடங்களிலெல்லாம் மரியாதை மதிப்பும் பெற்றவன்.

மன உளைச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த போது எனது ஓய்வு நேரம் மிகக் குறைவாக இருந்தபோதும், மிகுந்த உற்சாகத்துடன் எனது அர்ப்பணிப்புடன் கூடிய வேலையை செய்தேன். அதனால் எனது உடல் பலவீனத்தையும் கவலைகளை மறந்து வேலை செய்தேன். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக திருநெல்வேலி மாநகரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறேன்.

பாளையங்கோட்டை
காவல்துறையில் குற்றங்கள் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. ஆனால் அதை நிவர்த்தி செய்வது என்பது கடினமான செயல். அதுவும் பாளையங்கோட்டை போன்ற பெரிய காவல் நிலையங்களில் ஒரு காவலரை தண்டிப்பதற்கு உயரதிகாரிக்கு நிறைய வழிகள் உண்டு. இந்த பதிவை போடுவதால் எனக்கும் தண்டனை கிடைக்கும் என்பதை தெரிந்தே இப்பதிவை நான் பதிவிடுகிறேன. தெரிந்தே செய்கிறாயா முட்டாள் என நினைப்பவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எண்ணம் தோன்றும் எனக்கு நாற்பத்தைந்து வயது ஆனபோது உடல்நலம் இன்னும் நன்றாகவே உள்ளது. ஆனால் மன அழுத்தம் அதிகமாகி எனது இதயம் துடிக்க மறந்து விட்டால் எனது குடும்ப உறவுகள் நடுத்தெருவுக்கு வந்துவிடும்.

ஓய்வு இல்லை
அப்படி இறப்பதை விட எனது மனக்கவலை வெளிக்காட்டி தண்டனை அனுபவிப்பதை நான் தவறாக நினைக்கவில்லை. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நான் விடுப்பு இல்லாமல் எனது திருமண நாள் பிறந்த நாள் வரை ஓய்வு எடுக்காமல் வேலை செய்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். கடந்த 10 மாதங்களில் ஒருநாள் கூட தொடர்ந்து 5 மணி நேரம் நான் உறங்கியது இல்லை.

10 நிமிடம்
எனது அன்பு மகள் உறங்கியபின் வீட்டுக்கு வருவதும் காலையில் விழிக்கும் முன்பாக நான் வேலைக்கு செல்வது வாடிக்கையான ஒன்று எனது குழந்தைகள் என்னை ஒரு பத்து நிமிடமாவது என்னுடன் விளையாட வாருங்கள் என்று அழைக்கும் போது கூட என்னால் அதற்கான நேரம் ஒதுக்க முடியாத அளவிற்கு நான் காவல் பணியில் இருந்து வருகிறேன். இருப்பினும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை உணருகிறேன். என்னிடம் குறைகள் ஏதேனும் இருப்பினும் இன்றுவரை தலை நிமிர்ந்து நிற்கிறேன். ஆனால் இன்று அது நான் தவறு செய்ததாக உணருகிறேன் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன் காவல் பணியில் எனது பணி தொடருமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு ஆடியோவில் உதவி ஆய்வாளர் பேசியுள்ளார் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
காவல்துறையில் மனஅழுத்தம் போக்க 8 மணி நேர வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும்,. அவர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களை விட கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், வார விடுமுறை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைகிளை அண்மையில் உத்தரவிட்டது. உண்மையில் காவலர்கள் மன அழுத்ததிற்கு காரணம் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாதது தான். அதை சரி செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்துவது தான் சிறப்பான முடிவாக இருக்கும்.முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications