பூச்சாண்டி காட்டுறீங்களா.. உதவி ஆட்சியருடன் கடும் வாக்குவாதம் செய்த மாஜி அதிமுக எம்எல்ஏ
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக எம்எல்ஏ மீது புகார் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குபட்ட ரவணசமுத்திரத்தில் 18அடி நீளமுள்ள நீரோடையை ஆக்கிரமிப்பு செய்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் அகற்றிட மாவட்ட நிர்வாகம் உத்திராவிட்டதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், மற்றும் பெண் வட்டாட்சியர் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினரோடு அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. ஜாகிர் உசேன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்புகளால் தங்களுக்கு பாதிப்பு உருவாகும் என எண்ணிய அந்தபகுதியை சார்ந்தவர்கள் சிலர் முன்னாள் ஆலங்குளம் சட்ட மன்றத் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பி.ஜி.ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து உதவி ஆட்சியர் ஆகாஷைப் பார்த்து, ''நீங்க எப்படி ஆக்கிரமிப்பை அகற்றலாம்? நீங்க இங்கே 3 மாதமோ 6 மாசமோ இருப்பீங்க. அப்புறமா போயிடுவீங்க. நாங்க இங்கேயே இருப்போம். 6 அடிக்கு மேல ஆக்கிரமிப்பை எடுத்தால், உங்க பேரை எழுதி வச்சுட்டு செத்திருவோம். இப்போவே இங்க ரெண்டு பேரு சாவாங்க. சட்டப்படி செய்யுறதையெல்லாம் உங்க கேரளாவுல போயி செய்யுங்க. இது தமிழ்நாடு. இங்கே வந்து பூச்சாண்டி காட்டுறீங்களா?
ஆக்கிரமிப்பை எடுத்தால் என்னுடைய பிணத்தைத்தான் எடுக்கணும். ஜேசிபி-யை தூர எடுத்துட்டுப்போங்க. இப்ப கலெக்டர் இங்க வரணும். இல்லேனா, பஸ் மறியல் செஞ்சு சி.எம் வரைக்கும் பிரஷர் கொடுப்பேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு ஜே.சி.பி-யை அப்புறப்படுத்தியுள்ளார்.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் இருந்த ஒரு உயர் அதிகாரியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலையிலேயே ஒருமையில் திட்டியதுடன் எச்சரிக்கை விடுத்த சம்பவம், அதிகாரிகள் சர்ச்சையை உருவாக்கியது.
அதிகாரிகளை பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்த வீடியோ வைரலாக இணையதளத்தில் பரவியதை அடுத்து இன்று கடையம் காவல்துறை சார்பில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், மற்றும் பெண் வட்டாட்சியர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்தரன் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், பெண் ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.