சைரனை ஒலிக்கவிட்டு.. கிரிக்கெட் வெற்றி கோப்பையுடன் ஆம்புலன்சில் ஊர்வலம்.. 4 பேர் மீது வழக்குப்பதிவு!
நெல்லை: ஒருவருக்கு விபத்து ஏற்பட்டவுடன் தகவல் தெரிவித்த சில நிமிடங்களில் வந்து நிற்பது ஆம்புலன்ஸ் வாகனம். விபத்துக்குள்ளாகும் அல்லது உயிருக்கு போராடும் நபரை மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைப்பது என்ற அளப்பரிய பணியை செய்து வருகிறது ஆம்புலன்ஸ் வாகனம்.
போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும், குறுகலான இடங்களிலும் அதிவேகமாக சென்று பெரும்பாலானோரை உயிர்பிழைக்க வைத்துள்ளனர் ஆம்புலன்ஸ டிரைவர்கள்.
Recommended Video


ஆம்புலன்ஸ் வாகனம்
இப்படி உன்னத பணியை செய்து வரும் ஆம்புலன்ஸ் வாகனத்தை விளையாட்டு பொருளாக பயன்படுத்திய சம்பவம் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நடந்துள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் தனியார் டிரஸ்ட் சார்பில் சுதந்திரதினத்தையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியினர் வெற்றி பெற்றனர். தாங்கள் பெற்ற வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாட அவர்கள் முடிவு செய்தனர்.

அவசர கால சைரன்
இதனை தொடர்ந்து அந்த கிரிக்கெட் குழுவினர் தங்களது நண்பர்கள் வைத்திருக்கும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களை அங்கு வரவழைத்தனர். அதில் ஒரு ஆம்புலன்ஸின் கூரையில் வெற்றி கோப்பையை வைத்து, வெற்றி பெற்ற அணி வீரர்கள் ஆம்புலன்ஸில் தொங்கியபடி வலம்வந்தனர். அவர்களை மற்றவர்கள் பின்தொடர்ந்தனர். மேலும், கிரிக்கெட் அணியினர் ஆம்புலன்ஸின் அவசர கால சைரனை ஒலிக்க விட்டு மைதானத்தை முழுவதுமாக வலம் வந்து கடும் அலப்பறையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கருத்து
இந்த காட்சியை அந்த குழுவினரே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வீடியோ வைரலானது. உயிரை காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை விளையாட்டு பொருள் போல மாற்றி வெற்றி கோப்பையுடன் அதில் தொற்றிக் கொண்டு செல்லும் வாகனமாக பயன்படுத்தியது மிகவும் தவறானது. இது மிகவும் வேதனையளிக்கிறது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு
அதுவும் உயிர்காக்கும் உன்னதபணியை மேற்கொள்ளும் ஆம்புலன்ஸ டிரைவர்களே இவ்வாறு செய்யதிருப்பது முறையற்றது என்று நெட்டிசன்கள் கடுமையாக பொங்கியெழுந்தனர். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மேலப்பாளையம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அந்த 4 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இனிமேல் இதுபோல் செய்யக்கூடாது என்று ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களிடம் போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications