தின்பண்டங்கள் கிடையாதுனு பட்டியலின மாணவர்களை விரட்டிய தென்காசி பெட்டிக்காரர் கைது.. கடைக்கும் சீல்
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் பட்டியலின மாணவர்களிடம் தீண்டாமை காட்டிய பெட்டிக் கடைக்காரர் மகேஸ்வரனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அது போல் ஒரு பிரிவை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள ஒரு கடையில் அவர்கள் தினமும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். அது போல் நேற்றைய தினம் தேன் மிட்டாய், குருவி ரொட்டி உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
கட்டுப்பாடானு அந்த பிஞ்சு குழந்தை கேட்குது.. குழந்தைகளின் ஏக்கத்தை பாருங்கள் முதல்வரே.. வன்னியரசு
விரட்டும் பெட்டிக் கடைக்காரர்
அப்போது அந்த கடைக்காரர், சிறிதும் மனசாட்சியின்றி, "இந்த உள்ளூர் கடையில் தின்பண்டங்கள் யாரும் வாங்கக் கூடாது, நீங்கள் ஸ்கூலுக்கு போங்க, சரியா, உங்க வீட்லயும் எல்லாரிடமும் சொல்லுங்கள், தின்பண்டங்கள் கொடுக்க மாட்டேங்கிறாங்கன்னு! என்கிறார்.
என்ன கட்டுப்பாடு
அதையும் மீறி அந்த குழந்தைகள் அங்கேயே நிற்கிறார்கள். அதற்கு அந்த கடைக்காரர், கொடுக்க மாட்டோம்டா, இந்த ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு என்கிறார். அதற்கு அந்த குழந்தைகள் கட்டுப்பாடா அப்படின்னா என கேட்கிறார்கள். அதற்கு அவர் , ஆமாம் ஊரில் கூட்டம் போட்டு உங்களுக்கு தின்பண்டங்கள் கொடுக்கக் கூடாது என பேசியுள்ளார்கள் , சரியா போங்க என்கிறார். அந்த குழந்தைகளும் ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.
குழந்தைகள் வீடு
அந்த குழந்தைகள் வீட்டில் சொல்லி அவர்களின் பெற்றோர் வந்து கேட்ட பிறகும் அந்த கடைக்கார் நெருப்பை உமிழ்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்காசி எஸ் பி கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் போலீஸாார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டியலினத்தவர்களுக்கு கட்டுப்பாடு
பட்டியலினத்தவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்ததாக ஒரு பிரிவை சேர்ந்த ராமசந்திரமூர்த்தி என்பவரிடம் போலீஸாார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மாணவர்களை அவமானப்படுத்தவிட்டு தலைமறைவாக உள்ள பெட்டிக் கடை உரிமையாளர் மகேஸ்வரனை போலீஸார் கைது செய்தனர். அவருடைய பெட்டிக் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. கடைக்காரர் விரட்டுவதும் குழந்தைகள் கவலை தோய்ந்த முகத்துடன் செல்வதும் பார்ப்போரை கலங்கடிக்கச் செய்துவிட்டது.