பாப்பாப்குடியில் பரபரப்பு.. திருநெல்வேலி எஸ்ஐ மீது அரிவாளோடு பாய்ந்த சிறுவன்? நடுங்கிய நெல்லை போலீஸ்
திருநெல்வேலி: நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... பாப்பாக்குடியில் ஏற்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 17 வயது சிறுவன் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. போலீஸ்காரரை சிறுவன் அரிவாளால் வெட்ட வந்தாரா? உண்மையிலேயே நடந்தது என்ன?
நேற்றிரவு பாப்பாக்குடி என்ற ஊருக்கு வெளியே, ரமேஷ் என்பவருடன் 17 வயது சிறுவன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த சக்தி என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த நபரை , 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்ட முயற்சித்திருக்கிறார்கள்.. இந்த திடீர் தாக்குதலில், சக்திக்கு காலில் வெட்டுக்கள் விழுந்து, காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன..

அதிர்ச்சி தகவல்
அதற்குள் இந்த தகவல் ஊருக்குள் பரவி பெரும் அதிர்ச்சியை தந்துவிட்டது.. பிறகு, ஊர் மக்களே போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.. அப்போதுதான், ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் இரண்டு காவலர்கள் அந்த இடத்திற்கு சென்று, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.. ஆனால், போலீசார் வந்ததும், 17 வயது சிறுவன் போலீசாரையும் அரிவாள் கொண்டு தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனை சிறிதும் எதிர்பாராத போலீசார், சிறுவனை தடுக்க முயன்றுள்ளனர்.. ஆனால், சிறுவன், அரிவாளுடன் போலீசாரை விரட்டிக் கொண்டே சென்றுள்ளார். இதனால், சிறுவனிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், போலீசார் அந்த பகுதியிலிருந்த ஒரு வீட்டில் புகுந்துவிட்டார்கள்.. ஆனால், அந்த வீட்டிற்குள்ளும் சிறுவன் அரிவாளுடன் துரத்தி வந்துவிட்டார்.. உதவி ஆய்வாளரையும் வெட்ட முயற்சித்துள்ளார்.
விரட்டி வந்த சிறுவன்
இதனால், போலீசார் கதவை அடைத்தபோதும், அந்த கதவையும் அரிவாளாலேயே ஆவேசமாக தாக்கியிருக்கிறார் சிறுவன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்காப்புக்காக போலீசார் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள்.. இதில், சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில், ஒரு காவல்துறை அதிகாரியும் அரிவாள் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அதேபோல, தாக்கப்பட்ட சக்தி என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர விசாரணை
திருநெல்வேலி பாப்பாகுடியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் வந்து முடிந்துள்ளது.. இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் இதுசம்பந்தமான விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..!!!
சிறுவன் அரிவாளுடன் பாய்ந்ததால்தான், தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக முதலில் தகவல் வெளியானது.. ஆனால், இந்த 17 வயது சிறுவன் சண்முகசுந்தரம் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்த உண்மைத்தன்மையை, காவல்துறை வெளியிடும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications