Nellai Kavin | என் மகனை போல் அவரது மகளை.. கண்ணீர் வந்திருக்காது.. பாராட்டியிருப்பேன்.. நெல்லை கவின் தந்தை பேட்டி
நெல்லை: எனது மகனை செய்தது போல் அவரது மகளையும் கொ* செய்திருக்கலாம் அல்லவா. அப்படி செய்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். எனது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. எஸ்பி நினைத்தால் உடனே அவர்களை பிடித்திருக்கலாம் என நெல்லை கவினின் தந்தை சந்திரசேகர் பேட்டியில் கூறியிருக்கிறார். அவரது பேட்டியில் கூறியது மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் பற்றி வீடியோவிலும், செய்தியிலும் பார்ப்போம்.
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (26) படித்துள்ளார்.

இருவருக்கும் காதல்
அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கவின்குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இதனால் கவின்குமார் அடிக்கடி ஏரலில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்து தனது காதலியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பெண் வீட்டார் எதிர்ப்பு
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று மதியம் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.
தம்பி சுர்ஜித் ஆவேசம்
இதனை எப்படியோ அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் அறிந்துகொண்டார். இதற்கிடையே சிகிச்சை முடிந்ததும் கவின்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சுர்ஜித், கவின்குமாரை பேச அழைத்துள்ளார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரி வெட்டிவிட்டு தப்பிஓடினார்.
கவின்குமார் உயிரிழப்பு
இதில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கவின் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது கவின்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது சுர்ஜித் என்பதை உறுதி செய்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் கவினின் சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வீட்டின் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு தூத்துக்குடி திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கானணி ரவுண்டானாவில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான கலந்து கொண்டதால் இங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
24 மணி நேரத்தில் நடவடிக்கை
அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்படாத எடுத்து நீண்ட நேரம் போராட்டம் தொடர்ந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பிறகு இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. 24 மணி நேரத்தில் குற்றவாளியான சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவரையும் கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் மூன்று மணி நேரம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர்.\
நெல்லை கவின் தந்தை பேட்டி
இதனிடையே எனது மகனை செய்தது போல் அவரது மகளையும் கொ* செய்திருக்கலாம் அல்லவா. அப்படி செய்திருந்தால் நான் பாராட்டி இருப்பேன். எனது கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்திருக்காது. எஸ்பி நினைத்தால் உடனே அவர்களை பிடித்திருக்கலாம் . எங்களை மட்டும் இரவு நேரம் என்றும் பாராமல் வீடு புகுந்து தூக்கிச் செல்கிறீர்கள் எங்களது பிரச்சனைக்கு தீர்வு காண திருமாவளவன் நாளை மறுநாள் வருகிறார். எங்கள் பிரச்சனை பாராளுமன்றம் வரை ஒழிக்கும் என நெல்லை கவினின் தந்தை சந்திரசேகர் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த பேட்டியை செய்தியுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications