நாங்க சும்மா இருக்க மாட்டோம்.. திருவள்ளூரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்! அம்பேத்கருக்கு மரியாதை!
திருவள்ளூர் : விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் எனவும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஆந்திரா அரசு இரண்டு அணைகளை கட்டுவதை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆந்திராவிற்கு சென்று ஆந்திர முதலமைச்சரை சந்தித்து இந்த திட்டத்தினை தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, ஆந்திரா அரசு இரண்டு அணைகளை கட்டுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருவள்ளூர்மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.

பாமக ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,"கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், திருவள்ளூர் மாவட்டத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைக்காக கூடியிருக்கிறோம். திருவள்ளூர் மாவட்டத்தின் மீது அக்கறை கொண்டு கூடியிருக்கிறோம். ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளது, அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் கட்டளையை ஏற்று, இந்த ஆர்ப்பாட்டத்தினை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் என்பது, தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏதாவது பிரச்சனைகள் என்றால் முதல் குரல், மருத்துவர் அய்யாவிடமிருந்து, பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்து தான் வரும்.

அன்புமணி ராமதாஸ்
கத்திரிப்பள்ளி என்ற இடத்தில் 540 ஏக்கர் பரப்பளவில் 92 கோடி மதிப்பீட்டில் ஒரு அணையும், மொக்கோலா கண்டிகை எனும் இடத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் 72 கோடி மதிப்பீட்டில் ஒரு அணை என இரண்டு அணைகளை ஆந்திர மாநில அரசு கட்டுகிறது. இந்த இரண்டு அணைகளையும் ஆந்திர அரசு கட்டி விட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கொசஸ்தலை ஆற்றில் வந்து சேராது. இதே போன்ற ஒரு திட்டத்திற்காக தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திராவின் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகளை கட்டுவதற்காக திட்டமிட்டு அவர் அறிவித்திருந்தார்.

ஆந்திர அரசு
அதனை எதிர்த்து முதல் குரலை தெரிவித்தவர் இந்த அன்புமணி ராமதாஸ் தான். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் இதே பள்ளிப்பட்டில், இதே இடத்தில் நாம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சிகளும் அறிக்கையை வெளியிட்டார்கள். பாமகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக ஆந்திர அரசு திட்டத்தை கைவிட்டது. அது பாட்டாளி மக்கள் கட்சி கிடைத்த வெற்றி. தற்போது மீண்டும் இரண்டு அணைகள் கட்டுவதாக ஆந்திர அரசு திட்டமிட்டு இருக்கிறது. இரண்டு அணைகளும் மிகப்பெரிய அணைகள் என்பது இங்கே நாம் குறிப்பிடத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சி
இந்த நீர் பாசன திட்டங்களை தமிழகத்தில் எந்த கட்சியும் பேச மாட்டார்கள். அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களுக்கு இதைப் பற்றி தெரியாது. பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் இதனை பற்றி பேசும். பாட்டாளி மக்கள் கட்சி மையக் கொள்கையே, விவசாயிகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்றவைகள் தான். தமிழகத்தில் எங்கே பாதிக்கப்பட்டாலும் அங்கே முதல் நாளாக அன்புமணி ராமதாஸ் இருப்பார். குறிப்பாக விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் ஓடோடி சென்று போராட்டங்களை நடத்தி விவசாயிகளின் உரிமையை மீட்டுக் கொடுப்பவன் இந்த அன்புமணி ராமதாஸ்.

தமிழக அரசு
எங்களை எல்லாம் வழிநடத்தும் மருத்துவர் அய்யா அவர்கள் அடிப்படையில் விவசாயி. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விவசாயிகளை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம். இந்த பிரச்சனை என்பது ஒட்டுமொத்த திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் பிரச்சனை. திருவள்ளூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், குடி தண்ணீர் இருக்காது. சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் நடத்தியிருக்கிறோம். இன்னும் தொடர்ந்து அடுத்த அடுத்த கட்ட போராட்டத்தினை நாங்கள் அறிவிப்போம். அதற்கு முன்னதாக தமிழக அரசு, ஆந்திர அரசிடம் பேசி வலியுறுத்தி இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" என அன்புமணி பேசினார்.












Click it and Unblock the Notifications