புட்லூரில் அவசரமாக தண்டவாளத்தை கடந்த பெண்... ரயில் வடிவில் வந்த எமனால் பல பாகங்களாக சிதறிய உடல்
ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று எத்தனையோ முறை சொன்னாலும் அதைக் கேட்காமல் பலரும்தண்டவாளத்தை கடந்து சென்று உயிரை பறி கொடுக்கின்றனர்.
திருவள்ளூர்: எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதாமல் உயிர் தப்பிய இளம் பெண் ஒருவர் புறநகர் ரயில் மோதி உடல் பல துண்டுகளாக சிதறி உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பார்ப்பவர்களை பதை பதைக்க வைக்கும் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் பெயர் திவ்யா. திருவள்ளூரை அடுத்த புட்லூரில் வசித்து வருகிறார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வாழ்ந்து வருகிறார்.

திருவள்ளூர் என்ஜிஓ காலனியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்து நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு வீடு திரும்பினார்.
புட்லூர் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது அரக்கோணம் பகுதியில் இருந்து சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது. இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதாமல் அவசரமாக கடந்து சென்றார்.
அப்போது அவர் எதிர் திசையில் சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி வந்த விரைவு புறநகர் ரயிலை கவனிக்கவில்லை. சட்டென்று அந்த ரயில் மோதியது. சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிற்கு திவ்யாவின் உடல் மற்றும் இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் திவ்யா உடல் பல பாகங்களாக சிதறி உயிரிழந்தார்
இதுகுறித்து ஆவடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் அப்பெண்ணின் ஒரு பகுதி உடலை புட்லூர் ரயில் நிலையத்திலும் பாதி சிதறிய உடல் பாகங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருசக்கர வாகனமும் ரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் நொறுங்கிய நிலையில் கிடந்தது. அதனையும் காவல்துறையினர் மீட்டனர். இந்த விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அப்பகுதியில் மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபேறுவதாலும் ரயில்வே கேட்டை கடந்து செல்ல போதிய வெளிச்சம் இல்லாததால் இதுபோன்ற விபத்து சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 10 தினங்களுக்கு முன்பு இதே போல் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது அதிர்ஷ்டவசமாக நபர் ஒருவர் உயிர்தப்பி அவரது இருசக்கர வாகனம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி அரை கிலோ மீட்டர் தொலைவு இழுத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரயில்வே மேம்பால பணிகளை உடனடியாக முடித்தால் மட்டுமே உயிர்பலி நிகழாமல் காக்க முடியும். ரயில்வே கேட்டை கடக்க உதவும் வகையில் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications