முட்டை கேட்ட மாணவர் மீது துடைப்பத்தால் தாக்குதல்.. சமையலர், உதவியாளர் சஸ்பெண்ட், கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, போளூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு முட்டை கேட்ட மாணவரை பணியாளர்கள் இருவர் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சமையலர், உதவியாளர் இருவரை இடைநீக்கம் செய்தும், 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டும் கல்வித் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்காக வழங்கப்படும் சத்துணவு முட்டை வழங்கப்படாமல் அதை சத்துணவு ஊழியர்கள் வெளியில் விற்பனை செய்துவிடுகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து புகார்கள் வந்தால் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் சத்துணவு வழங்கியபோது முட்டை கேட்ட மாணவரிடம் முட்டை இல்லை என்று ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் முட்டை இருப்பது தெரியவந்ததையடுத்து அதுகுறித்து அந்த மாணவர் கேள்வி எழுப்பிய நிலையில் மாணவரை துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய நேரத்தில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கு இன்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது, உணவுடன் முட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, 5 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சமையலறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்கு முட்டை இருப்பது தெரியவந்துள்ளது.
முட்டைகளை சமையல் கூடத்தில் வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று கூறுகிறீர்கள் என்று அந்த மாணவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் அந்த மாணவனை வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த துடைப்பத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை தாக்கிய சமையலர் லட்சுமி மற்றும் உதவியாளர் முனியம்மாளை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கல்வி அலுவலர் சாமி முத்தழகன் உத்தரவிட்டுள்ளார்.
சத்துணவு முட்டைகளை மாணவர்களுக்கு வழங்காததே தவறு எனும் நிலையில், வகுப்பறைக்குள் புகுந்து மாணவரை துடைப்பத்தால் தாக்கியுள்ள சம்பவத்துக்கு பொதுமக்கள் பலரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சமையலர் மற்றும் உதவியாளரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications