மனைவி தலைவர்; கணவன் துணைத்தலைவர் - திருத்துறைப்பூண்டி நகராட்சியை கைப்பற்றிய தம்பதி - ஆடிப்போன திமுக
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கணவன் - மனைவி பதவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதனால் திமுகவினரே அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். தமிழத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சியும் திமுக வசம் வந்தது.
திருவாரூர் மாவட்டத்தையும் திமுக கைப்பற்றியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியும் திமுக வசம் வந்தது.
அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவினர் சாலை மறியல்.. அமைச்சர் பேச்சுவார்த்தை
திருத்துறைப்பூண்டி
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதா பாண்டியன் தேர்வாகி இருக்கிறார். துணைத் தலைவராக அவரது கணவர் பாண்டியன் தேர்வாகி இருக்கிறார். ஒரு நகராட்சி ஒரு குடும்பத்தின் கையில் இருப்பதாக எதிர்கட்சிகள் இப்போதே பேசத்தொடங்கியுள்ளன. ஒரே குடும்பத்தினர் வென்றிருப்பது திமுகவினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நகராட்சி
நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாண்டியன், திருத்துறைப்பூண்டி முன்னாள் நகா்மன்றத் தலைவா். இவர்கள் மொத்த குடும்பமும் திமுக. பாண்டியனின் தாய் ராஜேஸ்வரி செல்வராஜன், திருத்துறைப்பூண்டி நகா்மன்றத் தலைவராகவும், இவரது தந்தை செல்வராஜன், திருத்துறைப்பூண்டி பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளனா். தேர்தலுக்கு முன்பே கணவன் மனைவி இருவருமே, தலைவராகவும் துணைத்தலைவராகவும் வருவார்கள் என பேச்சு எழுந்தது.
செல்வாக்கு
திருத்துறைப்பூண்டி திமுக நகரச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ் பாண்டியன். இந்த பகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர். இவர் மூன்று முறை நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே நகர்மன்ற துணை தலைவராகவும் பதவி வகித்தவர். இந்த முறை போட்டியின்றி ஜெயிக்க முடிவெடுத்தார். திருத்துறைப்பூண்டி நகராட்சி 5-வது வார்டில் வேட்பு முனுத் தாக்கல் செய்திருந்தார். அங்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த
சுயேட்சைகள் மனுவை வாபஸ் பெற்றனர்.
போட்டி வேட்பாளர்
நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால், தேர்தலுக்கு முன்பே அது பாண்டியன் மனைவிக்கு தான் என முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு, துணைத் தலைவர் பதவி, திமுக-வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனாலும், இன்று நடந்த மறைமுக தேர்தலில் கூட்டணிக்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவின் பாண்டியன் வென்றுள்ளார். இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி பதவி ஏற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாண்டியன் ராஜினாமா செய்வாரா, திருத்துறைப்பூண்டியில் என்ன நடக்கும் என்பதை அறிய திமுக வட்டாரங்கள் ஆவலாக இருக்கின்றன.