இது என்ன புது டுவிஸ்டு.. ஓபிஎஸ்சுடன் நான் பேசுவதை விட்டு பல வருஷமாச்சு.. டிடிவி தினகரன் திட்டவட்டம்
திருவாரூர்: ஓபிஎஸ் உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், ஆதரவாளர்களை ஓபிஎஸ் அடுத்தடுத்து வருகிறார்.
இதனிடையே ஓபிஎஸ் - டிடிவி தினகரன் - சசிகலா ஆகியோர் விரைவில் கூட்டாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சசிகலாவை நேரடியாக சந்தித்தார். அதேபோல் மறுபக்கம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகவும், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பேசி வந்தார்.
திருவாரூரில் டிடிவி தினகரன்
ஆனால் இதுவரை இவர்கள் மூவரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை. டிடிவி தினகரன் தரப்பில் அமமுகவை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியை வலுப்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலைப் போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தான் உள்ளன. யாருடன் கூட்டனி என்பது அப்போது அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் பதிலடி
தொடர்ந்து திமுக அமைச்சர்களின் பேச்சு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி செய்த திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய் வாக்குறுதிகள் அளித்து ஆட்சி வந்த திமுகவின் சாயமும் வெளுத்து வருகிறது. அமைச்சர்களின் ஆணவப் பேச்சு, ஸ்டாலின் குடும்பத்தின் ஆதிக்கம் அனைத்திற்கும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் பற்றி கருத்து
ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, ஓபிஎஸ் உடன் பேசி பல வருடங்கள் ஆகின்றன. அதேபோல் அதிமுகவினர் என்னோடு பேசுவதை அரசியலாக பார்க்க வேண்டாம். அரசியல் வேறு பழக்க வழக்கம் வேறு என்று விளக்கமளித்தார்.
சட்டமன்றத் தேர்தல்
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடக்குமா என்ற கேள்விக்கு, என்ஐஏ சோதனை, இறையாண்மைக்கு எதிராக பேசுவது, ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது தமிழகத்தில் 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று பதிலளித்தார்.