”பார்க்கதான போறீங்க” முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையா? சசிகலா சொன்ன ஒற்றை பதில்!
திருவாரூர்: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பொதுமக்களும், கழக உடன் பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாய்பாபா கோயில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குவிந்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் பக்தர்கள் மீது தூவப்பட்டன. இந்த கும்பாபிஷேகத்தை காண சசிகலா மற்றும் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். சசிகலா கும்பாபிஷேகத்துக்கு வந்தபோது ஏராளமான பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சசிகலா பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சசிகலா கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பொதுமக்களும், கழக உடன் பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஓபிஎஸ் மட்டுமல்ல எல்லோரும் சந்திக்க வந்தாலும் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

பொறுத்திருந்து பாருங்கள்
தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதா என்ற கேள்விக்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தனிச்சையாக செயல்படுவது குறித்தும், யாரையும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று கூறியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

பதிலால் எழும் சந்தேகம்
அதற்கு ஒற்றைத் வார்த்தையில், சரி நீங்கள் பார்க்க தான போறீங்க என்று பதில் அளித்தார். இத்தனை நாட்களாக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வந்த சசிகலா, முதல்முறையாக எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் வந்தால் சந்திப்பேன் என்று கூறியுள்ளதால், விரைவில் ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு?
கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியுள்ள நிலையில், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களை கூட்டி பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர் செல்வம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் வரும் செப்.15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications