இடைத் தேர்தல் நடப்பது 18... அத்தனை பேர் கண்ணும் திருவாரூரில்.. அடுத்த "கருணாநிதி" யார்!
திருவாரூர் இடைத்தேர்தல் திமுக-அமமுக இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
சென்னை: இருக்கிற 18 தொகுதி இடைத்தேர்தல்களிலேயே, கருணாநிதியின் சொந்த தொகுதியை இந்த முறை யார் கைப்பற்ற போவது என்பவதில்தான் அதிக ஆர்வமும், அதிக போட்டியும் ஏற்பட்டுள்ளது
திருவாரூர் தொகுதி - விவசாயிகள் நிறைந்த மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான தொகுதி. சங்கீத மும்மூர்த்திகள் அவதரித்த திருத்தலம் என்ற பெருமை திருவாரூருக்கு உண்டு.
ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே இங்கு அதிகம். மறைந்த திமுக தலைவரின் சொந்த தொகுதி. சாகும்வரை இந்த தொகுதியின் எம்எல்ஏ.. போன்ற பல சிறப்புகளை பெற்றுள்ளது. பொதுமக்களுக்கும் - திருவாரூருக்கும் நல்ல உறவு உண்டு.
மாபெரும் வெற்றி
இங்கு 2016-ல் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டு வென்றார். அது மட்டுமில்லை.. தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையையும் கருணாநிதிக்கே கிடைத்தது. அதாவது தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை விட 68 ஆயிரத்து 366 வாக்கு வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.
படு எளிமை, வெகு இயல்பு... செல்போன் கூட போன வாரம்தான் வாங்கினாராம்.. ஆச்சரிய இலக்கியதாசன்!
தேர்தல் ஏஜென்ட்
கலைஞரது இறப்பினால் இங்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அனுபவமிக்க வேட்பாளர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்காக தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர்தான் இந்த பூண்டி கலைவாணன்.
18 தொகுதி இடைத்தேர்தல்.. யார் யாருக்கு இடையில் போட்டி.. மாஸ் லிஸ்ட் இதோ!
பூண்டி கலைவாணன்
கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அடிப்படை காரணம் பூண்டி கலைவாணன் என்றும் பலமுறை வெளிப்படையாகவே பேசப்பட்டது. அதனால் கருணாநிதி இடத்தில் இவரை வைத்து அழகு பார்த்துள்ளார் முக ஸ்டாலின். பூண்டி கலைவாணன் குடும்பம் நீண்ட கால அரசியல் களதில் இருப்பதால் தொகுதி மக்களுக்கு பரிச்சயம் ஆனவர்.
மக்கள் ஓட்டுக்கள்
vதிமுக கூட்டணி பலம் மற்றும் தொகுதிக்கு திமுக காலத்தில் நிறைய செய்து உள்ளன. இவ்வளவு இருந்தாலும் வெற்றி தோல்வியை நிர்ணியக்க கூடிய பட்டியல் இன மக்கள் ஓட்டுக்குள் இவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. இவர் மீது பட்டியல் இன மக்கள் தீவிர கோபத்தில் உள்ளனர். ஏனெனில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நிறைய தீங்குகளை இவர் செய்திருக்கிறார் என்று பரவலான ஒரு பேச்சு உள்ளது. இது இவருக்கு பெரிய மைனஸ் ஆக உள்ளது.
கவரும் எளிமை
அதேபோல அமமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் எஸ்.காமராஜ். நல்ல மனிதர். அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர். மதுரையில் எப்படி அழகிரியோ, அப்படிதான் திருவாரூரிலும் காமராஜ், எளிமையாக தொண்டர்களிடம் பழகுவார். அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர். கடுமையான உழைப்பாளி. தொழிலதிபரும்கூட. மாவட்ட செயலாளராக 15 வருஷத்துக்கும் மேலாக இருந்து வருகிறார்.இதனால் இந்த மாவட்டம் இவருக்கு அத்துப்படி. "பசை" உள்ள பார்ட்டியும்கூட.
கட்டாயம்
இது டிடிவி தினகரனின் சொந்த மாவட்டம் ஆகும். மேலும் தினகரனுக்கு எதிராக செயல்படும் திவாகரனுக்கு இந்த தொகுதியில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அமமுக வேட்பாளர் காமராஜ்.
அதிமுக
அதிமுக வேட்பாளராக ஜீவானந்தம் போட்டியிடுகிறார். இவர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் இல்லை. இதுவே இவருக்கு பெரிய மைனஸ். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர். தொகுதியும் தேர்தலும் இவருக்கு புதிது. மேலும் அதிமுக-பாஜக எதிர்ப்பு அலை, ஹைட்ரோ கார்படன் திட்டத்தால் பொதுமக்கள் அதிருப்தி, கஜா புயல் பாதிப்பை கண்டும் காணாமல் இருந்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் வரிசை கட்டி நிற்கின்றன.
செம போட்டி
எப்படி பார்த்தாலும் திமுக தலைவர் போட்டியிட்ட தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக திருவாரூரை தக்க வைக்க திமுக கடுமையாக போராட வேண்டி உள்ளது. அதேபோல அமமுகவை பொறுத்தவரை எதிரியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எஸ்.காமராஜ் உள்ளார். அதனால் இன்றைய கள நிலவரம் என்னவென்றால், நேரடி போட்டி திமுக, அமமுகவுக்கும் என்று சொல்லு நிலைமையில்தான் உள்ளது.
பார்ப்போம் கலைஞர் தொகுதி இனி யாருக்கு என்று?!