சந்தில் சிந்து பாடும் மாஜி.. அவரெல்லாம் ஒரு ஆளே இல்லை.. ஜெயக்குமாரை விளாசிய டிடிவி தினகரன்
திருவாரூர்: சந்தில் சிந்து பாடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஆளே இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இணையவே மாட்டோம் என்று நான்பல முறை தெரிவித்துள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை தினமும் உறுதிப்படுத்தி வருகிறார். அதனால் அவரோடு ஒன்றிணைந்து செயல்பட மாட்டோம்.
அம்மா மறைந்த நன்னாளில்.. இபிஎஸ் யார்னு தெரிஞ்சு போச்சு! ஆனாலும் கூட்டணி ஓகே! தடாலடி டிடிவி தினகரன்!
திரும்பவும் சொல்கிறேன்
ஆனால் அதே நேரத்தில் நான் திரும்பவும் சொல்கிறேன். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும், எல்லோரும் ஒரு அணியில் சேர வேண்டும். 4 ஆண்டு கால திருவிளையாடலை மக்களால் பொறுத்து கொள்ள முடியாத சூழலில்தான் 10 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த திமுகவினர் திருந்தி இருப்பார்கள் என நினைத்துதான் ஆட்சியை கொடுத்தார்கள்.
திருந்தவே இல்லை
ஆனால் அவர்கள் திருந்தவே இல்லை. திமுக சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுகிற ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் மற்றும் ஊடகம் வெளிச்சம் இருப்பதால் திமுகவினரை நிறைய பேர் தூக்கிப்பிடித்து கொண்டிருக்கிறார்கள்.
ஏமாற்றம்
மக்கள் மிகுந்த வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் இருந்து வருகிறார்கள். இது நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக வெளிப்படும். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சி ஒன்றுடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் இடத்தில் அமமுக நிச்சயம் இருக்கும்.
ஆன்லைன் சூதாட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சந்தில் சிந்து பாடுவது போல் பேசி வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சை விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே கண்டியூரில் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். அவர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசியிருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துள்ள வயல்களில் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. விவசாயிகளிடம் அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் தன்னிச்சையாகப் புறவழிச்சாலையை அமைக்கிறது. மாற்றுப் பாதையில் புறவழிச்சாலை அமைக்கலாம். இந்த நிலையில் இப்போது செயல்படுத்தப்படும் புறவழிச்சாலை திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிற வகையில் உள்ளது.
ஆற்றில் தண்ணீர்
தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் பாலமும் கட்ட முடியாது. இந்தச் சூழ்நிலையில் அவசர அவசரமாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இங்கு நிலம் வைத்துள்ள விவசாயிகளை அழைத்துப் பேசி இந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும். எனவே அவர்களுடைய கருத்துகளை கேட்டறிய வேண்டும். அதுவரை இந்தச் சாலை போடுவதை நிறுத்த வேண்டும். தஞ்சாவூர்- திருவையாறு புறவழிச்சாலை தேவைதான் என்றாலும் அரசு கவனமுடன் கையாள வேண்டும். மேலும் விவசாயிகள், இந்த பகுதி மக்களின் ஆதரவுடனும், அனுமதியுடனும் உரிய இழப்பீடு வழங்கிச் செயல்படுத்த வேண்டும் என தினகரன் கூறியிருந்தார்.