காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் - 90 நாட்கள் வரை தரிசனம் செய்ய அனுமதி
கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ. 300 விரைவு தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல். உடல் வலி உள்ளவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா தீவிரமாக பரவுகிறது... இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது. ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்த பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு சென்று மத்திய விசாரணை அலுவலகத்தில் அவர்களின் ரசீதை ஸ்கேன் செய்தபின், அவர்கள் துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று அறைகளை பெற்று வந்தனர். இதனால் பக்தர்கள் இருவேறு இடங்களுக்கு சென்று அறைகளை பெறவேண்டியிருந்தது.
இந்நிலையில் தேவஸ்தானம் இந்த முறையை தற்போது எளிதாக்கி உள்ளது. திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும்.
அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்கும் அறையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.