பிரதமர் மோடியை வரவேற்கும் பாஜக பேனர்கள்.. வள்ளலே.. செம்மலே என திராவிட கட்சிகள் பாணியில் அசத்தல்
திருப்பூர்:திருப்பூருக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியிலும், பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதற்காக பாஜகவினர் வைத்துள்ள வரவேற்பு பேனர்கள் தான் ஹைலைட்.. வள்ளலே... செம்மலே என்று திராவிட கட்சிகள் பாணியில் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு செல்கிறார்.
அங்கு நடைபெறும் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தொடங்கி வைக்கிறார்.
பிரச்சாரம்
நிகழ்ச்சிக்கு பின்னர், அதே பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமரின் விழா மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை தேசியப் பாதுகாப்பு படையின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடுமையான சோதனை
விழா நடைபெறும் இடங்களுக்குச் செல்ல அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வருகையை ஒட்டி 2 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்
கடும் பாதுகாப்புகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் மோடியின் நிகழ்ச்சி நிரல், அவரது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் என்ன பேச போகிறார் என்பதை விட பாஜகவினர் வைத்துள்ள வரவேற்பு மற்றும் வாழ்த்து பேனர்கள் தான் ஹைலைட்.
பாஜக தொண்டர்கள்
கிட்டத்தட்ட 8 தொகுதிகளை சேர்ந்த பாஜக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடிக்கு ஏராளமான வரவேற்பு பேனர்களை வைத்துள்ளனர். வள்ளலே... செம்மலே... வாழும் விவேகானந்தரே... இந்தியாவின் உயிரே... புதிய இந்தியாவின் எழுச்சி நாயகனே என்று எங்கு பார்த்தாலும் பேனர்கள் திக்கு முக்காட வைக்கின்றன.
வித்தியாசமான பேனர்கள்
பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் காணப்படும் வித்தியாசமான வார்த்தைகள் பாஜகவினரே ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். எங்கு பார்த்தாலும் கட்சிகொடிகளும், பாஜகவினரின் உற்சாக குரல்களே ஒலிக்கின்றன.
வழி நெடுகிலும் பேனர்கள்
தெக்கலூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரு புறமும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவிய மோடி... பயிர் காப்பீட்டு திட்டம் தந்த வள்ளலே என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. செல்வ மகள் திட்டம் தந்த செம்மலே என்றும் வாசகங்களும் பளிச்சிடுகின்றன.