சுதந்திரத்திற்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம்..? எதுக்கு இந்த வேலை? - போட்டுத் தாக்கிய ராஜா!
திருப்பூர் : நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.ராஜா, பாஜகவினர் சுதந்திரமே தங்களால் தான் கிடைத்ததுபோல பேசி வருகின்றனர், நாட்டின் சுதந்திரத்தில் பாஜகவுக்கு துளியும் பங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் தேசியக்கொடி பறக்கவிட வேண்டும், சமூக வலைதள முகப்புப் படங்களில் தேசியக் கொடியை வைக்க வேண்டும் என பாஜக அரசு வலியுறுத்தி வரும் நிலையில் டி.ராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் சுதந்திர தின விழா! தலைநகர் டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி கைது! பெரும் நாச வேலை முறியடிப்பு
ஓரணியில் திரள வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, "மத, சாதி அடைப்படையில் இந்தியா பிளவுபடுகிறது. ஆர்.எஸ்.எஸ் இந்துக்களின் பிரதிநிதிகள் போல மாயையை உருவாக்குகிறது. ஆர்.எஸ்.எஸ் பேசும் மதவாதம் மக்களுக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிரிகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள். பாஜக ஆட்சியில் இருந்தாலும் ஆட்டி வைப்பது என்னவோ ஆர்.எஸ்.எஸ் தான். இந்தியாவில் பெரியாரிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் ஓரணியில் திரள வேண்டும்.
தள்ளி வைத்துள்ளோம், தடுக்கவில்லை
கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையாவது நடத்தி இருக்கிறாரா? தமிழகத்தில் நாம் ஒன்றுபட்டு செயல்படுகிறோம். அதனால் பாஜக காலூன்றுவதை தள்ளிப்போட்டிருக்கிறோம். ஆனால் தடுத்துவிடவில்லை. தமிழகத்தில் திமுக பின்பற்றும் கூட்டனி கொள்கையை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதில்லை. பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரனியில் திரள வேண்டும்." எனப் பேசினார்.
அம்பானி - அதானி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.ராஜா, "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு வரும் அக்டோபர் மாதம் விஜயவாடா நகரில் நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. பாஜக அரசு மக்கள் விரோத கொள்கைகளை அரசியல் தளத்திலும், சமுக தளத்திலும் பின்பற்றுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்கு சாதகமாக மோடி அரசு செயல்படுகிறது.
சர்வம் தனியார்மயம்
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயம் ஆக்கப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்படுவதன் மூலம் சமூக நீதி தகர்க்கப்படுகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர மோடி அரசு தயாராக இல்லை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற பிறகு, அதற்காக கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. எல்.ஐ.சி, விமான நிலையம், வங்கிகள் ஆகிய அனைத்துமே தனியார்மயம் ஆகி வருகின்றன.
சுதந்திரத்தில் பாஜகவுக்கு பங்கு இல்லை
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத, நாட்டின் சுதந்திரத்துக்கு துளியும் பங்கு இல்லாத கட்சி பாஜக. ஆனால், பாஜகவினர் சுதந்திரமே தங்களால் தான் கிடைத்ததுபோல பேசி வருகின்றனர். 2024-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னர் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும்
தமிழகத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் திமுக தலைமையில் ஒன்றுபட்டதால், இங்கு பாஜகவால் வர முடியவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் இதுபோல இல்லை. இந்தியாவின் முக்கிய ஜனநாயகமே நாடாளுமன்றம் தான். ஆனால் தற்போது அதுவும், செயல்படாத நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே நிலை நீடித்தால், இந்தியாவின் ஜனநாயகம் மரணமடைந்ததாக அர்த்தமாகிவிடும். காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.