அதிகாரிகளுக்கு பறந்த மெசேஜ்.. ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு - திருப்பூரில் திடுக் சம்பவம்
திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி மோசடியில் அரசு அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
ஐ.ஏ.எஸ். அதிகாரி வினீத் கடந்த ஒரு ஆண்டாக திருப்பூரில் மாவட்ட ஆட்சியராக பணியில் இருந்து வருகிறார்.
இவரது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ் அப் எண்ணில் இருந்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு மெசேஜ் ஒன்று சென்றுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மெசேஜ்
அதில், "எவ்வாறு இருக்கிறீர்கள்? வேலை எவ்வாறு செல்கிறது?" என்று கேள்வி எழுப்பட்டு இருக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகள் சிலரும் பதில் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து வங்கி விவரம் போன்றவை கேட்கப்பட்டு இருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசில் புகார்
அப்போது அவரது பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் கணக்கு போலியாக தொடங்கி, மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயற்சி செய்தது தெரியவந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் காவல் துறையினர் மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம ஆசாமிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலி பேஸ்புக் கணக்கு
இதற்கு முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரிலும் இதேபோல் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டனர். இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினீத் பெயரில் வாட்ஸ் அப்பில் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்றிருக்கிறது அந்த கும்பல்.

மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் கூறியதாவது, "போலியாக வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி, பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் விசாரணையில் முதற்கட்டமாக அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது, செல்போன் டவர் ராஜஸ்தானில் காண்பித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை எடுத்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பெயரில் இருந்தோ அல்லது அவரது புகைப்படத்தை பயன்படுத்தியோ ஏதாவது எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால் போலீசில் புகார் தெரிவிக்கலாம்." என்றார்.












Click it and Unblock the Notifications