மாதம் 2000 கட்டினால் 11 லட்சம்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆர்வம் காட்டும் திருப்பூர் மக்கள்
திருப்பூர்: பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த திட்டத்தில் சேர பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 518 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர் என்று தபால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்தி வந்தால் 11 லட்சத்திற்கு மேல் பணம் கையில் கிடைக்கும்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுகன்யாக சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை கொண்டு வந்தது பெண் குழந்தையின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் டெபாசிட்டுக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை பொறுத்தவரை ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சேமிப்பை கணக்கை ஆரம்பிக்கலாம்.ஒருவேளை முதல் பிரசவத்திலோ அல்லது 2-வது பிரசவத்திலோ இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் 2-க்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியும். இந்த திட்டத்திற்கு நிகரான வட்டி விகிதம் எதிலுமே கிடையாது. வங்ககளில் சேமித்தாலும், எப்டியில் போட்டாலும் இவ்வளவு வருமானம் பெண் குழந்தைகளுக்கு கிடைக்காது.
இதன் காரணமாக பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினர் ஆர்வமுடன் இந்த சேமிப்பை கணக்கை தொடங்கினார்கள். 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தையின் பெயரில் போட முடியும் என்பதால், ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலகத்திற்கு வந்து தங்களின் சேமிப்பை இதில் தான் பலர் சேமித்து வருகிறார்க்ள். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.
வங்கிகள், தபால் அலுவலகங்களில் நிரந்தர, தொடர் வைப்புத்தொகை போன்றவற்றுக்கு வழங்கப்படும் வட்டியை விட கூடுதல் வட்டி வழங்கப்படுவதால் குழந்தையின் பெயரில் கணக்குகள் தொடங்கப்படுவது நாடு முழுவதும் அதிகரித்தபடி உள்ளது.. தாய் தனியாகவும், தந்தை தனியாகவும், தங்களது மகள் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி சேமித்து வருகிறார்கள்.
திருப்பூர் தபால் அதிகாரி இதுபற்றி கூறுகையில், "பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே பிரத்யேகமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பெண் குழந்தைகள் வளர்ந்த பின் அவர்களுக்கான கல்வி, தொழில் மற்றும் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு இப்போதே சேமிக்க செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டியையும் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.
இந்த திட்டத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் பெயரில் 15 ஆண்டுகளுக்கு பணத்தை செலுத்த வேண்டும். இந்தியாவில் வசிக்கும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்து, செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான 8 சதவீத வட்டியுடன் 21 ஆண்டுகள் கழித்து ரூ.11 லட்சத்து 16 ஆயிரத்து 815 கிடைக்கும்.
தற்போது இந்த திட்டத்தில் ஏராளமானோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். இதைதொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 5 ஆயிரத்து 518 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர்" இவ்வாறு திருப்பூர் தபால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications