ரிதன்யா கணவர், மாமனார், மாமியாருக்கு கிடைத்த ஜாமீன்.. கண்கலங்கி உருக்கமாகப் பேசிய தந்தை!
திருப்பூர்: திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியாருக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில், ரிதன்யாவின் தந்தை உருக்கமாகப் பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்த ரிதன்யா என்பவர் அண்மையில் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் ஆன 78 நாட்களிலேயே புதுமணப்பெண் தன்னுடைய தற்கொலை முடிவு குறித்து ஆடியோ வெளியிட்டு விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் ரிதன்யாவின் பெற்றோர்கள் வைத்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்டார்.
தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறையில் உள்ள ஈஸ்வரமூர்த்தி, கவின்குமார், சித்ராதேவி ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்ட்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் ஜாமீன் மனு போட்டிருந்தார்கள். நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் ஜாமீன் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அங்கும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால், ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் கொடுத்துவிட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம்.
அதேநேரம் ஐகோர்ட்டில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டு ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சட்டத்தை நம்புகிறேன். நீதியரசர்களை நம்புகிறேன். தமிழக அரசிடமும் முறையிட்டுள்ளோம். அவர்களும் நீதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள். என் பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications