"விசிக வருதோ இல்லையோ.. விசிக தொண்டர்கள் தவெகவுக்கு வந்துகொண்டுள்ளனர்"- குண்டு வைக்கும் செங்கோட்டையன்
திருப்பூர்: "திமுகவுக்கு கூடுவது காசு கொடுத்து கூட்டப்படும் கூட்டம். தவெகவுக்கு தானாக கூட்டம் சேருகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. விசிக தவெக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, அக்கட்சியின் தொண்டர்கள் அத்தனை பேரும் தவெகவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்" என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் தவெக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய செங்கோட்டையன், "திமுகவுக்கு கூடுவது காசு கொடுத்து கூட்டப்படும் கூட்டம். தவெகவுக்கு தானாக கூட்டம் சேருகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்குள்ளே சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. விசிக தவெக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, அக்கட்சியின் தொண்டர்கள் அத்தனை பேரும் இங்கு (தவெக) வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அரசின் கடமை. பெண்களுக்காகவே பல்லடத்தில் மாநாடு நடத்தினார்கள். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் ரூபாய் பணம், பேருந்து வசதி, உணவு, சேலை அனைத்தும் வழங்கி தான் அந்த கூட்டத்தை கூட்ட முடிந்தது. தவெக சார்பில் ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு லட்சம் பேர் வந்தார்கள். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூட்டத்தை கூட்டியிருந்தோம்.
பணம் இல்லாமல் வருகின்ற கூட்டம் இங்கே, பணம் கொடுத்தால் வருகின்ற கூட்டம் அங்கே, அதுவும் அவர்களுக்கு இரண்டு மணி நேரம்தான் டைம் அதற்கு மேலே சென்றால் அவர்கள் எழுந்து சென்று விடுவார்கள். ஆனால் இங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டம் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வருகிறார்கள். விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என உயிரை பணயம் வைத்துக் கொண்டு இயக்கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார் தவெகவிற்கு வருகிறார்கள் என்பதை இப்போது கூற இயலாது. வெளிப்படையாக கூறினால் அங்கே பிடித்து வைத்துக்கொள்வார்கள். பொங்கலுக்குள் அவர்களை தவெகவில் இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் தெளிவாக இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைத்தாலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல மாட்டார். ஆனால் அழைக்க வாய்ப்பில்லை, இதனை மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி. டிடிவி, ஓபிஎஸ் தவெக கூட்டணியில் இணைவது விரைவில் நடைபெறும்.
திமுக கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. விசிக தவெக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, அக்கட்சியின் தொண்டர்கள் அத்தனை பேரும் இங்கு தவெகவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications