தமிழகத்தில் அடுத்தடுத்து கொலையாகும் போலீஸ்காரர்கள்! 6 மாதத்தில் 2வது சம்பவம்! அதிர்ச்சி
திருப்பூர்: திருப்பூரில் விசாரணை நடத்தச் சென்ற காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பணியிலிருந்த காவல்துறையினரை கொலை செய்வது சமீப காலத்தில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. குடிமங்கலம் பகுதியில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முக சுந்தரம். குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிக்கனூத்து பகுதியில், அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.
இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்கள் தங்கி தோட்டப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை மகன்கள் இருவரும் தந்தையை தாக்கியதாக தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரம் மற்றும் ஒரு காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்த சண்முக சுந்தரத்தின் மீது கோபமடைந்த மகன்கள் இருவரும், அருகே இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டினர். தாக்குதலில் படுகாயமடைந்த சண்முக சுந்தரம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தாக்கிய இருவரும், அவர்களது தந்தையும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
உடன் சென்ற காவலர் கொடுத்த தகவலின்படி, போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கொலையாளிகளை தேடி விரிவான வலைவீச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனின் சொந்த தோட்டத்தில் காவல் அதிகாரி ஒருவரே கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த மார்ச் மாதம் மதுரையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல் துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உசிலம்பட்டி பகுதியில் பணியாற்றி வந்த முத்துக்குமார் மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் முத்துக்குமாரை கொடூரமாக தாக்கி கொலை செய்தது.
இந்நிலையில் விசாரணைக்குச் சென்ற போது எஸ்.எஸ்.ஐ கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறையினர் இடையே பதைபதைப்பை உண்டாக்கியுள்ளது. மேலும், பணியில் இருக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மேலும், ஓடும் பஸ்சில், ரவுடிகள் சேர்ந்து, காவலர்களை மிரட்டுவது போன்ற வீடியோக்களும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு செல்லும் இரண்டாம் நிலை காவலர்களாக இருந்தாலும் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைக்க அனுமதிக்க வேண்டும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications