சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 550 கொடிக் கம்பங்கள் அகற்றம்.. ஹைகோர்ட்டில் திருப்பூர் மாநகராட்சி பதில்
திருப்பூர்: சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 550 கொடி கம்பங்களை அகற்றி உள்ளதாக திருப்பூர் மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்து முன்னேற்ற கழகத் தலைவர் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் கொடிக்கம்பங்களை அமைத்திருப்பதாகவும், விதிமுறைகளுக்கு முரணாகவும், சட்ட விரோதமாகவும் நடைபாதைகளில் கொடிக்கம்பங்களை நடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திருப்பூர் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களை எந்த அனுமதியும் பெறாமல் இந்து முன்னணியினர் வைத்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவிற்கு முரணாக கொடிக்கம்பங்களை வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் கொடிக் கம்பங்களை அகற்றும்படி மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், திருப்பூரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி உள்ளிட்டடோரின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திருப்பூர் மநகராட்சியில் வைக்கப்ப்பட்ட 600 சட்டவிரோத கொடிக் கம்பங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 550 அகற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மீதமுள்ள சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றுமாறு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications