வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றது அதிர்ச்சியளிக்கும் செயல் - முதல்வர் கண்டனம்
ஜெனிவாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை தாக்க முயன்றதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா சென்றுள்ளார்.
கடந்த 18ஆம் தேதிமுதல் வைகோ தனது கருத்தை முன்வைத்து பேசி வருகிறார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் பொதுச்செயலாளர் வைகோ இன்று இரண்டு முறை பேசினார்.
பேசிவிட்டு வந்த வைகோவை சிங்களவர்கள் பலர் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார்.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகோவை சிங்களர்கள் சிலர் தாக்க முற்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தயது என்று கூறினார்.
மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடக்காமலிருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.