ஷவர்மா இருக்கட்டும்... திருச்சி பேக்கரியில் 155 கிலோ கெட்டுப்போன கேக் வகைகள் - அதிகாரிகள் ஷாக்
திருச்சி: தில்லைநகரில் உள்ள பிரபல பேக்கரிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 150 கிலோ கெட்டுப்போன கேக் வகைகள் மற்றும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video
திருச்சி தில்லைநகர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரியில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு பொதுமக்கள் புகாரளித்து இருக்கின்றனர்.

இதனை அடுத்து தில்லை நகரில் உள்ள ஒரு பிரபல கேக் விற்பனை செய்யும் உணவகத்தை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு கெட்டுப்போன 27.45 கிலோ கேக் வகைகள் இருந்துள்ளன. இவற்றை தயாரிக்கும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது சுமார் 126.65 கேக் வகைகள் மற்றும் பப்ஸ் தயாரிப்பதற்காக வைத்திருந்த கெட்டுப்போன இறைச்சிகள் என மொத்தம் சுமார் 155 கிலோ கெட்டுப்போன உணவு வகைகள் கண்டறியப்பட்டன. இவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள், 2 இடங்களுக்கு அவசர தடையாணை நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து, மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்கள் அன்றைய தினம் மீதமாகும் இறைச்சியை கண்டிப்பாக குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. எளிதில் கெட்டுப்போன மற்றும் காலாவதியான கேக் போன்ற உணவு பொருட்களை உடனே அழித்துவிட வேண்டும்.
ஆய்வின்போது அவ்வாறு குளிர்சாதன பெட்டியில் இறைச்சியோ வேறு கெட்டுப்போன உணவு பொருளோ கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்களும் இதுபோன்று தங்களது பகுதிக்கு அருகே காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
மாவட்ட புகார் எண்: 9944959595, 9585959595
மாநில புகார் எண்: 9444042322












Click it and Unblock the Notifications