அது ஒரு அழகிய கனாக்காலம்.. சொல்வதற்கு வார்த்தை இல்லை.. மறக்க முடியாத ஒரு ரியூனியன்!
திருச்சி: திருச்சி அருகே உள்ள தூய மரியன்னை தொடக்கப் பள்ளியில் 20 வருடத்திற்கு முன்பு படித்த மாணவ மாணவியர் மீண்டும் பள்ளியில் கூடி தங்களது மலரும் நினைவுகைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாம் அமர்ந்த இருக்கையை தொட்டு பார்த்து மகிழ்ச்சி அடைந்து ..
நமக்கு பிடித்த ஆசிரியரிடம் ..
அடித்த ஆசிரியரிடம் பேசியது ..
மதிய உணவை திருடி தின்றது..
வீட்டு பாடம் எழுதாமல் பொய் சொல்லியது
சுவாரயஸ்மான நினைவுகளை நினைத்து அசைபோட்டது.. மறக்க முடியாத நினைவுகள்தான்.. பள்ளிக் காலம்.
திருச்சி, மேலகல்கண்டார்கோட்டையில் உள்ளது தூய மரியமன்னை நடுநிலைப் பள்ளி. 1954 ஆம் ஆண்டு திருவாளர் மரிய சூசை, திருமதி தனம் ஆகியோரால் தொடங்கப்பட்டது இந்தப் பள்ளிக்கூடம். இன்று 66 ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைத்து பெரிய விருட்சமாக வேரூன்றி, பறவைகள் போல பல மாணவர்களைத் தலைமுறை தலைமுறையாய், வாழ்க்கைக்கான ஆணிவேராம் கல்வியை வழங்கி வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.
ஒழுக்கமும்
2020 ஆம் ஆண்டு தாளாளர் ம.ஜோசப் சர்ச்சில், அவரது மனைவி வி. பாத்திமா விஜயஸ்ரீ தலைமை ஆசிரியராகவும் இருந்து கல்வியோடு, ஒழுக்கத்தையும் சேர்த்து சிறப்பான அறப்பணியைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். மேலகல் கண்டார் கோட்டைப் பகுதியினைச் சுற்றி வாழ்பவர்கள், இந்தப் பள்ளியில் பயின்று சென்றவர்களாகத் தான் இருக்கிறார்கள். நாங்களும் அவர்களில் சிலர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
20 வருடத்திற்குப் பிறகு
1994 ஆம் வரும் 1ஆம் வகுப்பு சேர்ந்து 2001 ஆம் ஆண்டு 8ஆம் வகுப்பு முடித்து வெளியேறினோம்.. 20 வருடத்திற்கு பிறகு, 4 வருடத்திற்கு ஒரு முறை வரும் பிப்ரவரி 29 ஆம் நாள், சனிக்கிழமை 2020 அன்று ,2001 ஆம் வருடம் 8 ஆவது முடித்த நாங்கள், எங்கள் பள்ளிக்கு வர ReUnion ஏற்பாடு செய்து வந்தோம்.. அனைவரும் மிக்க மகிழ்வோடும், ஆர்வத்தோடும் பள்ளியில் நுழைய, எமது பள்ளி தாளாளரும், தலைமை ஆசிரியரும் நாங்கள் எதிர்பாராத விதமாக அனைவருக்கும் பூங்கொத்து, இனிப்பு வழங்கி, இன்னிசை முழங்க வரவேற்பு அளித்தனர்.
பிரமாண்ட வரவேற்பு
சும்மா சொல்லக் கூடாது.. ஆரவாரமான வரவேற்புதான் அது.. மாணவர்கள் நடனமாடி வரவேற்றது எங்களை நெகிழ்வித்தது. எங்கள் பள்ளி தாளாளர், தலைமை அன்னை, ஆசிரியர்கள் அனைவரையும் பூங்கொத்து வழங்கி, எங்களது பழைய, பசுமையான நினைவுகளைப் பகிரும் போதே எங்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் தான். எங்களது ஆசிரியப் பெருமக்களும் எங்களைப்பற்றி மகிழ்வாக, பெருமையாக பகிர்ந்தனர்.
நினைவுப் பரிசுகள்
பின், நாங்கள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளும், மாணவர்களுக்கு இனிப்பும், எழுதுகோலும், பள்ளிக்கு எங்களால் முடிந்த அன்பளிப்பாக நாற்காலியும் வழங்கினோம். பள்ளி சார்பாக எங்களது குழந்தைகளுக்கு புத்தகங்களும், எங்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கினார்கள். எங்கள் பசுமையான நினைவுகளையும், பள்ளியைப் பற்றிய நினைவுகளை சிறு குறும்படமாக ஒளிபரப்பினோம்.
உணவு
இந்நிகழ்விற்கு பிறகு, மதிய உணவு ஏற்பாடு செய்து, ஆசிரியப் பெருமக்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்கும் மனதோடு உணவு பரிமாறினோம். நாங்கள் அனைவரும் 2001 இல் வகுப்பு photo எடுத்தது போல, இன்று 2020 இல் Photo எடுத்தோம். இனி வருடா வருடம் இந்த Reunion ஐ சிறப்பாக நடத்தி, பள்ளியை மேம்படுத்த எங்களது பங்கு கண்டிப்பாக இருக்கும் என உறுதி கூறி பள்ளியை விட்டு வெளியேற மனமில்லாமல் சென்றோம். Reunion -ஐ எங்கள் பள்ளியில் நடத்தியதன் நோக்கம், எங்களைப் பார்த்து இப்போதுள்ள மாணவர்கள் இந்தப் பள்ளியின் அருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.. நமது வாழ்வில் முதலில் கிடைக்கும் எதுவாக இருந்தாலும் அதை நம்மால் மறக்க முடியாது. நமது வாழ்வில் முதலில் கிடைத்த பள்ளிக்கூட நட்பை வாழ்க்கையில் யாராலும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது.
இனிய நட்பு
அங்கு தான் நாம் நட்பின் இனிமையான உணர்வை முதலில் உணர்ந்தோம் அந்த முதல் நட்பின் உணர்வை தேடி நாங்கள் இந்த பள்ளிக்கூடத்துக்கு 20 வருடங்கள் கழித்து மீண்டும் வந்து சேர்ந்தோம் . ஏதோ தாயின் கருவறைக்கு மீண்டும் வந்தது போல ஒரு உணர்வு. அன்று சிறு வயதில் பள்ளிக்கு வந்த போது எவாறு வயிறில் சிறு பட்டாம்பூச்சி பறந்ததோ அதே போல இன்றும் அந்த பட்டாம்பூச்சி மீண்டும் பறந்தது.
அழகிய உணர்வுகள்
அது ஒரு அழகான உணர்வு சொல்லு வதற்கு வார்த்தைகள் இல்லை. நாம் அமர்ந்த இருக்கையை தொட்டு பார்த்து மகிழ்ச்சி அடைந்தது . நமக்கு பிடித்த ஆசிரியரிடம் அடித்த ஆசிரியரிடம் பேசியது மதிய உணவை திருடி தின்றது, து வீட்டு பாடம் ஏழுதாமல் பொய் சொல்லியது சுவாரஸ்யமான நினைவுகளை நினைத்து அசைபோட்டது மிகவும் மகிழ்ச்சியாக அந்த நாள் இருத்தது.
- பிரான்சிஸ் தீபா - திவ்யா மூர்த்தி