பிரதமர் மோடிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு! கருப்பு முருகானந்தம் தலைமையில் டீம் அமைத்த அண்ணாமலை!
திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்தை திறந்து வைப்பதற்காக வரும் ஜனவரி 2ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு, மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுப்பதற்காக கருப்பு முருகானந்தம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார் அண்ணாமலை.
டெல்டா மாவட்டங்களில் இருந்து பெருமளவில் கட்சியினரை திருச்சிக்கு திரட்டிச் சென்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2வது முனையம் கட்டுவதற்காக இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமத்தால் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை பிரதமர் மோடி தான் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன் கட்டுமானப் பணிகளை 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது தான் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனை திறந்து வைக்கத் தான் பிரதமர் மோடி ஜனவரி 2அன்று திருச்சி வருகிறார். இதனால் திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி ஏர்போர்ட் முழுவதும் ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் திமுகவினரும் இந்த நிகழ்வில் திரளாக கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இதனால் திமுகவினர், பாஜகவினர் இடையே எந்த சலசலப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் காவல்துறை மிக உஷாராக இருக்கிறது. பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் வரவேற்கவோ, வழியனுப்பவோ தவறாமல் செல்லக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த முறை அந்தப் பக்கமே செல்லமாட்டார் என்பது இன்றைய அதிமுக பொதுக்குழு உணர்த்திவிட்டது.












Click it and Unblock the Notifications