இந்து-திருமால், முஸ்லிம்-அல்லாஹ், கிறிஸ்தவர்-ஏசு.. ராகுலிடம் பாதிரியார் பேசியது தப்பில்ல -முத்தரசன்
திருச்சி: கன்னியாகுமரியில் ராகுல் காந்தியிடம் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஏசுவை கடவுள் என்று பேசியது ஒன்றும் சர்ச்சைக்குரிய கருத்து இல்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திலிருந்து கேரள மாநிலம் பரசலா பகுதிக்கு நடந்து சென்றார்.
தமிழ்நாடு ஓவர்... நெக்ஸ்ட் கேரளா.. நாளுக்கு நாள் ராகுல் காந்திக்கு பெரும் மக்கள் ஆதரவு!
மக்கள் சந்திப்பு பயணம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீர் வரை
380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.
பாஜக ட்வீட்
இந்த பயணத்தின்போது கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேசினார். அந்த வீடியோவை வெளியிட்டுள்ள தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாஜக சப்டைட்டிலுடன் வெளியிட்டு "இது உண்மையான பாரத் ஜோடோ யாத்திரை தான்." என்று குறிப்பிட்டது.
ராகுல் காந்தி பாதிரியார் சந்திப்பு
அதில், "ஏசு கிறிஸ்து கடவுளின் அவதாரம் என்பது சரியா" என்று ராகுல் காந்தி கேட்க, ஜார்ஜ் பொன்னையா, "அவர் உண்மையான கடவுள். அவர் தன்னை உண்மையான மனிதனாக காட்டிக்கொண்டது கிடையாது. சக்தி போன்று கிடையாது." என்று அவர் பதிலளித்தார். இந்த 13 வினாடி வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
முத்தரசன் கருத்து
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், "ராகுல் காந்தியிடம் பாதிரியார் பேசியது சர்ச்சை கருத்து கிடையாது. அவரவர் மதத்தின் கடவுளை உண்மையான கடவுள் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவரைக் கேட்டால் "இயேசு" என்று சொல்வார். இஸ்லாமியரை கேட்டால் "அல்லாஹ்" என்று சொல்வார்கள். இந்துக்களை கேட்டால் "திருமால்" என்று சொல்வார்கள்." என்றார்.